Sunday, January 7, 2007

தவிப்பு --- ஞாநி

விமர்சினம் செய்தவர்-நண்பன்


ம.பொ.சி.யின் நினைவாக என்ற சமர்ப்பணத்துடன் புத்தகம் தனது பக்கங்களை விரிக்கிறது.


நீங்கள் அறிந்தவர் தானே ம.பொ.சி.? மாறுபட்ட கருத்தியல்களின் மோதல்களில் மடிந்து போன பரிதாபத்திற்குரிய தலைவர். ஒன்றை எதிர்ப்பதற்காக மற்றொன்றை ஆதரித்தவர். அதனாலேயே தனது கனவுகள் எவை கருத்துகள் எவை என்ற கருத்தியல் மோதல்களுக்குள் சிக்கி, சமரசம் செய்து கொள்ளத் தொடங்கி சிறிது சிறிதாக தன்னை இழந்தவர்.


கதையும் அவரைப் போலவே ஆக்ரோஷமான கருத்துகளுடன் மோதுகிறது. தமிழ் மொழியின், நிலத்தின் மீட்சியைக் கனவாகக் கொண்டு கதையை எழுதும் ஆசிரியரின் பார்வை ஏற்கனவே அறிமுகமானது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் முன்பாகவே இது பற்றிய விரிவானதொரு விவாதம் நம் தளத்தில் இருக்கிறது. அதில் பங்கு பெற்று நான் எழுதியவற்றைப் படித்தாலே போதும் இந்த புத்தகம் முன் வைக்கும் கருத்தியல்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.


ஆனால் கதை எழுதுவதற்கு கருத்தியல்கள் மட்டுமே போதுமானவை அல்ல. விறுவிறுபான பின்னணியுடன் கதை நகர்கிறது. கொள்கை பிடிப்புள்ள கதாபாத்திரங்கள் உற்சாகமூட்டுகின்றனர். சிறிது சிறிதாகப் புத்தகங்களின் பக்கங்கள் வளரும் பொழுதே அந்த இயக்கமும் வளர்ந்து விடுகிறது. அந்த இயக்கத்தை அரசியல்வாதிகள் எவ்வாறு தங்கள் சுயநலத்திற்காக பேரம் பேசுகின்றனர் என்பது தான் கதையின் சுவராசியமான பகுதி. மத்தியில் ஆளும் வர்க்கம் மாநிலத்தில் ஆளும் வர்க்கத்தை மட்டம் தட்ட முயலுவதும், மாநில அரசுகள் போர்க்குழுக்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் - ஒருவர் மீது மற்றவர் சேறு வாரி இறைக்கும் அழகை கவனப்படுத்துகிறது. செய்திகள் எவ்வாறு திரிக்கப்படுகின்றன என்பதையெல்லாம் - ஓரளவிற்கு அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வரும் வாசகர்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாமேயன்றி, புதிதாக கதை வாசிக்கும் நபர்களுக்கு மிக்க விறுவிறுப்பான அம்சமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.



இவ்வாறு போகும் கதை இறுதியை நெருங்கும் பொழுது, நாயகன் தேர்தல் களத்தில் குதித்து வெற்றி பெற்று இந்த மோசமான அரசியல்வாதிகளை எதிர்கொள்கிறான் என்று கதையை முடிக்கும் பொழுது, சப்பென்று போய்விடுகிறது. கதையின் நோக்கமே சிதைந்து போகிறது. ஆனால் வேறு எப்படியும் கதையின் முடிவை எழுதவும் முடியாது - இந்தியாவிற்குள் இருந்து கொண்டு என்பதும் உண்மை. ஆசிரியர் கதையின் தொடக்கத்தில் முன்னுரையில் குறிப்பிட்டு விடுகிறார் - பல்வேறு இனங்களின் போராட்ட வரலாறுகளை மனதில் கொண்டு தான் கதையை எழுதியதாகக் குறிப்பிடுகிறார். என்றாலும் அவர் மிக அதிகமாக தன் கவனத்தில் எடுத்துக் கொண்டது பெரும்பாலும் அஸ்ஸாம் மாணவ போராட்டத்தைத் தான் என்றே எண்ண வைக்கிறது. மிகப் பெரும் உத்வேகத்துடன் போராடிய மாணவர்கள் இறுதியாக அறவழி என்று தேர்தல் களத்தில் குதித்து வெற்றி பெற்று பின்னர் அரசியல் அரங்கில் எவ்வாறு தோற்றுப் போனார்கள் என்று எல்லோரும் அறிந்தவையே.



ஒருவேளை அதனாலயே - எந்தப் போராட்டத்திற்கும் இந்தக் கதி வந்து விடக்கூடாது - மறைமுகமாக அந்தப்பின்னணியைக் கொண்டு எழுதினாரோ என்று தெரியவில்லை. ஆனால் சில தர்க்கங்கள் - எதற்காக தமிழ்ப் போராளிகள் இந்திய இறையாண்மையிலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறார்கள் என்ற தர்க்கங்கள் - நியாயமானவை. அரசு அதை இப்பொழுது கவனிக்கத் தவறினால் பின்னர் அதற்காகப் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்.


எல்லாத் தமிழ் உணர்வாளர்களும் படிக்க வேண்டிய புத்தகம். கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படுமா - படாதா என்பது விவாதத்துக்குரியது.

__________________