Friday, December 29, 2006

தலைமுறைகள்-நீல பத்மநாபன்






கற்பனையே கலக்காமல் எழுதப்பட்டது போன்ற புனைவுப் பாவனை கொண்டது . இம்மி கூட மிகை இல்லாதது . வட்டார வழக்கிலேயே கதையையும் சொல்ல முயல்வது .அதாவது மைய ஒட்ட அம்சங்கள் எதுவுமே இல்லாமல் முழுக்க முழுக்க பிராந்திய வட்டாரக் கலாச்சார அடையாளத்தை நம்பி இயங்கும் படைப்பு அது. ஆகவே அதை க. நா .சு ,வெ சாமிநாதன் ஆகியோர் ஒரு முக்கிய முன்னுதாரண படைப்பாக கருதி முன்வைத்தார்கள் .இப்போதும் தமிழ் எழுத்தின் முக்கியமான வலிமை என்பது இங்குள்ள பெரும்பாலான படைப்புகளின் பிராந்திய அடையாளத்தில்தான் உள்ளது .அதற்கு வழிகாட்டிய படைப்பு இது. [இவ்வகையில் அடுத்தபடியாக குறிப்பிடப்படவேண்டிய படைப்பு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு ] சமீபத்தில் குமுதம் எடுத்த ஒரு சர்வேயில் தமிழின் 10 நாவல்கள் பட்டியலில் எல்லாருடைய பட்டியலிலும் இடம் பெற்றிருந்த நாவல்களில் தலைமுறைகளும் ஒன்று .இது இப்போதும் இப்படைப்புக்கு உள்ள விமரிசக அங்கீகாரத்தை காட்டுகிறது.இன்று இப்படைப்பு அதன் இறுதிப் பகுதி கவித்துவமாக அமையாமல் நாடகத்தன்மையுடன் அமைந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக முக்கியமான படைப்பாகவெ கருதப்படுகிறது.

'தலைமுறை 'களின் கதை காலாகாலமாக இந்திய இலக்கியங்களின் பேசுபொருளாக உள்ள பெண்ணின் துயரம்தான் .நமது செவ்வியல் படைப்புகளிலும் சரி ,நவீன படைப்புகளிலும் சரி இவ்வாறு முக்கியமான அவலங்கள் பெண்கள் சார்ந்தவையாக இருப்பது சமூகவியல் ரீதியானகாழமான கவனத்துக்குரியது .ஏனெனில் பெண்கள் ஒடுக்கப்பட்டது உலகளாவிய நிகழ்வு ,பிற கலாச்சாரங்களில் மேலும் அதிகம் .அங்கெல்லாம் இப்படி பெண் காவியநாயகி யாக ஆக்கப்படவில்லை . வீரர்களே முக்கியமான காவியநாயகர்கள் அங்கு . இங்கு சீதையும் கண்ணகியும் மணிமேகலையும் காவியநாயகிகள்.அர்ச்சுனன்போன்ற ஒரு வீரனை ஐதீக மரபு உருவாகியபோதே அல்லியையும் அது உர்வாக்கியது .அடுத்த கட்ட வாய்மொழிக் கதைகளில் நல்லதங்காள் போன்ற அவல நாயகிகள் உள்ளனர் .பெண் ணை மையமாக்கிய அவலக்கதைகள் நம் அமரபின் கதைச்சொத்தின் பெரும்பகுதியை அடைத்துக் கொடன .பிற்பாடு நவீன புனைகதை வடிவங்கள் இஉருவான போது அதே பாணி தொடர்ந்தது .அக்கதைகளில் மரபில் உள்ள கதைகளின் தீவிரமான சாயல் இருந்தது இயல்பே.பிறகு திரைப்படங்களில் கூட அதே மரபுநீடித்தது .வான்மீகி ராமாயணமும் , மதர் இந்தியாவும் ஒரே நேர்கோட்டில் அமைந்தவையே .

இது குறித்து அடிப்படையான ஆய்வுக் குறிப்பொன்றை டி டி கோசாம்பி சொல்ல்லியுள்ளார். தாய்வழி சமூக அமைப்பாக இருந்து தந்தை வழி அமைப்புக்கு மாறியவையே இந்திய சமூகங்கள் ..நமது எண்ணற்ற தாய் தெய்வங்கள் அம்மரபின் தொடர்ச்சிகளே. நமது ஐதீக வாய் மொழிக்கதைகளில் அந்த வீழ்ச்சி குறியீட்டு வடிவில் முக்கிய இடம் பிடித்தது . பிறகு அத்தனை நேரடி வாழ்க்கை நினைவுப்பதிவுகளும் அந்த ஐதீக மரபில் இணைவு பெற்றன. ஆகவே காவியம் முதல் சிறிய கதை மரபு வரை வரை பெண்ணின் அவலம் முக்கிய மையமாயிற்று. இன்றும் நம் அகமன கட்டுமானத்தில் படிமங்களாக உள்ளது அந்த இறந்தகாலமே .ஆகவே நவீன இலக்கியங்கள் கூட அதே பாணியில் உள்ளன. பழிவாங்கும் உக்கிர தேவதை [பழையன்னூர் நீலி ] அருள் வழங்கும் அன்னை[ காஞ்சி காமாட்சி ] அடக்கியளும் அன்னை [சமயபுரம் மாரி ]என்று தமிழ் புனைகதைகளின் பெண் கதாபாத்திரங்களை நாம் தொல்படிம [aaன்] தர்க்கத்துக்குள் அடுக்கிப் பார்க்க முடியும்.

'தலைமுறை 'கள் அந்த மரபில் சகஜமாக இணைவதை அதன் தொடக்கப்புள்ளியிலேயே காணலாம். ஏழுவீட்டுச் செட்டிகளின் குடும்பத்தில் குலமரபின் வாய்மொழி ஐதீகமாக ஒரு கதை உள்ளது . அவர்களுடைய பூர்வீகம் காவிரிப்பூம்பட்டினம் .அவர்கள் அங்கிருக்கும்போது அங்குள்ள சோழ் மன்னனுக்கு விலைமதிப்பிட முடியாத சில பவளங்கள் கிடைக்கின்றன. அதில் துளைபோட்டு மாலையாக்க அங்குள்ள எல்லா பொற்கொல்லர்களும் முயன்றபோதும் முடியவில்லை .பவளங்கள் உடைந்து விடக்கூடும். என்ன செய்வதென்று மன்னன் தவித்து கடசியில் தன் அவையில் இருந்த ஒரு செட்டியாரை கூப்பிட்டு நீர் என்ன செய்வீரென்று தெரியாது நாளைக்கு விடிவதற்குள் இந்த பவளங்களுக்கு துளைபோட்டு கொண்டுவரவேண்டும் இல்லையேல் கழுத்தில் தலை இருக்காதெள என்று உத்தரவு போடுகிறான் . வீட்டுக்கு வந்த செட்டியார் கவலையுடன் இருப்பது கண்ட அவரது இரு மகள்கள் தங்கம்மையும் தாயம்மையும்தேற்றுகிறார்கள் .துளையை தாங்கள் போட்டு விடுவதாகச் சொல்கிறார்கள் .ஊசி நுனியில் பனைவெல்லச் சாறை தொட்டு ஒவ்வொரு பவளத்திலாக ஒரு பொட்டு வைத்து அவற்றை வரிசையாக எறும்பு புற்றுக்கு முன்னால் போடு விடுகிறார்கள் .எறும்புகள் வெல்ல வாசனையை குறிவைத்து அரித்து எல்லா பவளங்களிலும் சிறு துளைபோட்டு விடுகின்றன .

இந்த விஷயம் தெரியவந்தபோது மன்னன் இத்தனை அறிவுள்ள பெண்கள் இருக்கவேண்டிய இடம் அந்தப்புரம்தான் என்று சொல்லி பெண் கேட்கிறான் . சாதியை விட்டு பெண் கொடுக்க செட்டியார் குலத்துக்கு விருப்பமில்லை . மறுக்கவும் முடியாது .ஆகவே செட்டியார் தன் வீட்டில் இருந்த நிலவறைக்குள் அப்பெண்களை போகச்சொல்லி மூடி மேலே மண்ணை நிரப்பி விட்டார். பிறகு எல்லாரும் அங்கிருந்து கிளம்பி நடந்து குமரிமாவட்டம் வந்து இரணீயலில் குடியேறுகிறார்கள் . இந்தக் கதையை இந்நாவலின் முக்கிய கதாபாத்திரமான உண்ணாமுலை ஆச்சி தன் பெரனும் கதாநாயகனுமாகிய திரவியத்துக்கு குழந்தையாக இருக்கும் போது வீட்டை பெருக்கி கோலம் போட்டபடி சொல்கிறாள் .குறியீட்டு ரீதியாகப்பார்த்தால் பெண் புதைக்கப்பட்ட மேடு மீதுதான்நேழுவீட்டு செட்டியார் குலமே கட்டப்பட்டுள்ளது .அந்தக் குற்றவுணர்வு தலைமுறைதலைமூறையாக கைமாறவும் படுகிறது .ஆனால் அடிப்படையில் அது ஆண்வழி அதிகாரக்குலம் .அதன் அடையாளம் உலகமே தனக்கானது என்று எண்ணும் கூனங்காணிப்பாட்டா .

ஆகவே நாகு அக்கா அவள் கணவனால் குழந்தைபெற முடியாதவள் என்று விலக்கப்பட்ட போது ,சர்வ சகஜமான அந்த செயலுக்கு எதிராக திரவி செயல்பட ஆரம்பித்தது ஒரு முக்கியமான புரட்சி .ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டுபோய் அக்காவிடம் எந்தப் பிரச்சினையுமில்லை என்று அவன் நிரூபத்தது ஒருவகையில் அடுத்த காலகட்டத்தின் ---அறிவியல் காலட்டத்தின்-- வருகையின் குறியீடுமாகும் .அவள் கணவன் அவளை ஏற்கமறுத்தபோது அவளுக்கு மறுமணம் செய்விக்க அவன்முயன்றது கண்டிப்பாக ஒரு பெரும் புரட்சி நடவடிக்கையே . ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை .மொத்த நாவலும் தீவிரமான அவலத்தில் முடிகிறது . இந்த அவல முடிவு பெரிதும் விவாதிக்கப்பட்டது . அந்த வலம் சினிமாத்தனமாக இருப்பதாக முதிர்ச்சியில்லா விமரிசகர்கள் சொல்ல அழகியல் மொழி அறிந்தவர்கள் அம்முடிவு அதுவரை நாவலுக்கு இருந்துவந்த அப்பட்டமான நிதரிசனப்போக்குக்கு ஒத்து வராமையினால் சற்று நம்பகத்தன்மையை இழந்து விட்டிருக்கிறது என்றார்கள் . ஆனால் ந்தன் விடையை நாம் இலக்கிய வடிவில் மட்ட்மே தேடி விட முடியாது . தலைமுறைகள் ஒரு நீண்டன் வாய்மொழிமரபின் , ஐதீக மரபின் இன்றியமையாத தொடர்ச்சியாகும் .அம்மரபில்ஈருந்துவரும் அவல முடிவை அதுவும் தவிர்க்க முடியாது . அதாவது அந்த பவளம் கோர்க்கும் கதை நாவலின் தொடக்கத்தில் வந்ததுமே குறியீட்டு ரீதியாக நாவலை அது தீர்மானித்து விட்டது .அதை நீல பத்மனாபன் மீறிவிட முடியாது . சொந்த வாழ்வில் அவர் அதை மீறி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கதை எப்போதுமே கதைமரபின் தர்க்கத்துக்கு உட்பட்டது .

'தலைமுறை 'களின் நடை பெரிதும் பாராட்டப்பட்டது.ஏற்கனவே சொல்லப்பட்டது போல அது மிக நிதரிசனமான நடை .அதில் சுவாரஸியப்படுத்தும் அம்சங்கள் ஏதும் இல்லை .அழகுகளே இல்லை .உண்மையிலேயே அத்தகைய ஒரு வாழ்க்கைச் சூழலுக்கு எவ்வளவு உத்வேகம் இருக்குமோ அவ்வளவு உத்வேகமே அதிலும் உள்ளது. பொதுவாக இக்கியப்படைப்புகளில் கதைமையம் அல்லது கதைசொல்லி அறிவாளியாகவோ ,மிகுந்த நுண்ணுணர்வுள்ளவனாகவோ காட்டப்படுவதே வழக்கம் . காரணாம் அவன் மூலம் ஆசிரியர் வெளிப்படுகிறார் என்பதே .ஆனால் திரவி மிகச்சாதாரணமானவனாகவே காட்டப்படுகிறான்.லெளகீகமான , நடுத்தர வற்கத்துகே உரிய எல்லா கோழைத்தனங்களும் தயக்கங்களுமுள்ள ஒருவன் . அவன் புரட்சியாளனோ கலகக் காரனோ அல்ல .அவன் சற்று படித்து அதன்

மூலம் நவீன காலகட்டத்துக்குள் வந்தது மட்டுமே அவனுக்கும் பிறருக்குமிடையேயான வித்தியாசம் .இதன் மூலம் நாவலின் ஒவ்வொரு வரியிலும் நம்பகத்தன்மைமிக்க எளிமை உருவாகிவந்தது . ' 'சர்வ சாதாரணத்தின் கலை ' ' என்று தமிழில் எதையாவது சொல்லவேண்டுமென்றால் நீலபத்மநாபனின் இந்நாவலையே சொல்ல முடியும்.சாதாரணமான நடையின் சாதாரணத்தன்மையை மேலும் அதிகரிக்கும் முகமாக நீலபத்மநாபன் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் கதை சொல்லும் குரலுக்கும் வட்டார வழக்கை அளித்தார் .இது அக்காலகட்டத்தில் மிகவும் விவாதிக்கப்பட்டது .தூயதமிழ் வாதிகளின் எதிர்ப்பு நாவலுக்கு ஒரு எதிர்மறை விளம்பரமாகவும் அமைந்தது .

'சர்வசாதாரணம் ' என்பதற்கும் 'சர்வசாதாரணத்தின் கலை ' என்பதற்கும் ஏராளமான வேறுபாடு உண்டு . கலையின் சர்வசாதாரண இயல்பு ஒரு தோற்றமே . அது வாசக நம்பிக்கைக்காக உருவாக்கப்படும் ஒரு வெளிப்பாட்டு உத்தி மட்டுமே .கலை ஒரு போதும் சர்வசாதாரணமல்ல .சாதாரணமான நிகழ்வுகளின் பிரவாகமான வாழ்க்கை ஓட்டத்திலிருந்து சிலவற்றை பிரித்தெடுத்து முன்வைத்து ,அழுத்தம்தந்து ,உபரி அர்த்தம் அளித்து ,விளக்கி ,செறிவுபடுத்தி அதில் வாழ்க்கையின் ஒட்டுமொத்தம் சார்ந்த ஒரு பார்வையை அல்லது ஒரு அகத்தெளிவை குறிப்புணர்த்திக் காட்டுவதே இலக்கியக்கலையின் செயல்பாடாகும் .எல்லா கலையும் இவ்வியல்பினையே கொண்டிருக்கின்றன என்பார்கள் மொழியியல் பேராசிரியர்கள் .ஹால்லிடே முன்னிறுத்தல் [forefronting] என்று இதை விரிவாக விளக்குகிறார் . உதாரணமாக நித்ய சைதன்ய யதி ஒன்றை குறிப்பிடுவார் .வான்கா ஒரு ஏழை விவசாயியின் பழைய செருப்பை வரைந்தார் .அது ஒரு வெறும் பொருள்தான்.ஆனால் அதை முன்னிலைப்படுத்தி விடுகிறார் .அவரது கலை என்பது அங்குதான் செயல்படுகிறது . அதன் பிறகு அந்த செருப்புகள் வெறும் பொருட்களல்ல ,குறியீடுகள் ஆகிவிடுகின்றன அவை .அவற்றுக்கு உள்ளர்த்தங்கள் உருவாகி விடுகின்றன.உண்மையில் ஒரு பழைய செருப்பு உருவாக்காத பலவகையான மன அதிர்வுகளை அவை நம்முள் உருவாக்குகின்றன .

அதாவது உத்தி என்று பார்த்தால் மிகைப்படுத்தல் சாதாரணமாக்கல் ஆகிய இரண்டுக்குமே ஒரே மதிப்புதான் .தன்னளவில் எதற்கும் மதிப்போ இழிவோ உருவாவது இல்லை .ஒப்பீடூ சார்ந்து தற்காலிகமான மதிப்பீடுகள் உருவாகுமென்பது உண்மையே .அதாவது ஒரு சூழலில் எல்லா படைப்புகளுமே மிகையான கற்பனாவாதத் தன்மையுடன் இருக்கும்போது வரும் அப்பட்டமான யதார்த்தவாதப்படைப்பு அச்சூழலில் அதிர்ச்சியையும் அதன்மூலம் கவன ஈர்ப்பையும் அதன் அடுத்த கட்டமாக விமரிசன முக்கியத்துவத்தையும் பெறக்கூடும்.அதேபோலவே யதார்த்தவாத படைப்புகள் மலிந்த காலத்தில் வெளிவரும் அற்புத யதார்த்த படைப்புக்கும் அந்த முக்கியத்துவம் ஏற்படலாம் . ஆனால் படைப்பின் மொத்தமான முக்கியத்துவமென்ன

அதற்கு அவ்வுத்தி என்ன வகையில் பங்காற்றியுள்ளது என்பதே முக்கியமானது . தலைமுறைகளின் மேல்தளம் சாதாரணமானது என்றாலும் அதன் அடித்தளத்தில் நாம்வாழும் சமூகம் சார்ந்த சிக்கல்கள் சருமத்துக்கு அடியில் ரத்தக்குழாயின் பின்னல்கள் போல அடர்ந்துள்ளன. ஒரே ஒரு உதாரணம் சொல்லலாம்.திரவி தான் சார்ந்த ஏழுவீட்டு செட்டியார் சாதியை அதன் பழைமைப்போக்குகளில் இருந்து மீட்டு அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல முயல்பவன். அதேசமயம் அவன் தன்னை அறியாமலேயே பழைய காலத்துக்கான ஏக்கத்தையும் வெளிப்படுத்தியபடியே இருக்கிறான்.இந்தமுரண்பாடு எளிதில் விளக்கிவிடக் கூடியது அல்ல

திரவி இலட்சியவாதி அல்ல .தன் அக்காவை அவளது வாழ்க்கையின் துக்கத்திலிருந்து மீட்பதே அவனது இலக்கு .அவன் புதியகாலத்துக்கு போக முனைவது ஒரு சமூகஜீவியாக .அவனது மனம் இளமைப்பருவத்தை எண்ணி கடந்தகால வாழ்க்கைக்காக ஏங்குவது ஒரு தனிமனிதனாக . இத்தகைய ஆழமான அகமுரண்பாடுகள் நிரம்பிய ஒரு பரப்பாக உள்ளது தலைமுறைகளின் கதையோட்டம் .

'தலைமுறை 'களை மிக இளம்வயதில் படிக்கும்போது விசித்திரமான ஒரு பொறுமையின்மை ஏற்படும். திரவி என்ன செய்தும் ஒன்றுமே நிகழவில்லை .கூடிக்கூடிப் பேசுகிறார்கள்.மனக்கசப்புகளையும் நெகிழ்வுகளையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் .உறவுச்சிக்கல்கள் அடர்ந்து விரிந்தபடியே செல்கின்றன . மிக எளிய விஷயம் ,ஆனால் அது நடக்கவே இல்லை . ஒரு கட்டத்தில் தமிழக வாழ்க்கைச் சூழலை அறிந்தவர்களுக்கு நாகுவின் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற உண்மை புலப்பட்டுவிடும்.அதன் பின்பும் பேச்சுகள் .அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.குடும்பம் இரணியலைவிட்டு கிளம்புகிறது .நம் எளிய வாசக மனம் வேறு வகை முடிவுகளுக்காக துடிப்புகொள்வதும் ஆசிரியர் மீது மனக்கசப்பு கொள்வதும் இயல்பே . ஆனால் இம்முடிவே தமிழ் வாழ்க்கைச்சூழலில் பெருமளவு நடக்கக் கூடியது .மாறாக நடப்பது விதிவிலக்கே . 'தலைமுறைகள் ' அதன் யதார்த்த இயல்புப்படி விதியையே சார்ந்து இயங்க முடியும் .விதிவிலக்குகளை மையமாக்கும் படைப்புகள் கற்பனாவாதம் நோக்கி நகர்கின்றன.

'தலைமுறைகள் 'அவ்வகையில் ஒரு முன்னோடியாக அமைந்தது. நாம் முதலில் எழுதவேண்டியது கனவுகளையல்ல நிதரிசனத்தை என்று அது கற்பித்தது . எந்தக் கனவும் நிதரிசனம் சார்ந்து செயல்படும்போதே முக்கியத்துவம் பெறுகிறது என்று பொட்டில் அடித்தது போல சொல்லியது. இப்போது யோசிக்கும்போது வியப்பு ஏற்படுகிறது . அக்காலகட்டம் அரசியல் நோக்கோடு உற்பத்தி செய்யப்பட்ட வெற்றுக்கனவுகளும் ஆடம்பரச் சொற்களும் காற்றில் நிரம்பியருந்த காலகட்டம் . கற்பனாவதப்படைப்புகளை வாசகர்கள் ருசித்து விழுங்கிக் கொண்டிருந்த காலகட்டம் .அச்சூழலில் இருந்தபடி இத்தனை கறாரான யதார்த்த உலகை ஆக்குவதற்கு தன் கலையில் முழுக்க ஆழ்ந்து போகும் மனஒருமை கூடவேண்டும் . தன் கலைமீது ஆழமான நம்பிக்கை உருவாகவேண்டும் . மேலான கலைப்படைப்பு அதை சகஜமாக உருவாக்கிவிடும்போலும்.அந்த கலையம்சத்தால்தான் அது உருவான காலகட்டத்தின் எல்லா சூழல்சார்ந்த அர்த்தங்களும் அடிக்குறிப்புகளும் இல்லாமல்போன அடுத்த காலகட்டத்திலும் அதற்கடுத்த காலகட்டத்திலும் அந்நாவல் சட்டையுரித்து முன்னகரும் அரவம் போல புற அடையாளங்களையெல்லாம் கழட்டிப்போட்டு சென்றபடியெ இருக்கிறது போலும்.

Sunday, December 24, 2006

உறுபசி- எஸ்.ராமகிருஷ்ணன்

கதை, சம்பத் என்ற நண்பனைப் பற்றியது. சம்பத்தின் மரணத்தில் இருந்து தொடங்கும் கதை, அவனது மூன்று நண்பர்கள் - அழகர், ராமதுரை, மாரியப்பன் - ஆகியோரின் பார்வையில் நடத்திச் செல்லப்படுகிறது. மூவரும் கானல் காட்டுக்குப் போய் நண்பனைப் பற்றி யோசிக்கிறார்கள். ஒவ்வொரு நண்பரிடமும் சம்பத் எவ்விதமான உறவு கொண்டிருந்தான் என்பதில் விரியும் கதை, மிகவும் கட்டுக்கோப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவான வார்த்தைகளில் சொல்வதானால், சம்பத் ஒன்றுக்கும் உதவாதவன். வழக்கமான எந்த சட்டகங்களுக்குள்ளும் அவனைப் பொருத்திப் பார்க்க முடியாது. நினைத்த நேரத்தில் நினைத்த வேலையைச் செய்து, நினைத்த எண்ணங்களைச் செயல்படுத்திக்கொண்டு தான்தோன்றித்தனமாக வாழ்பவன். அவனது காதல், மேடைப் பேச்சு, அரசியல் ஈடுபாடு, பின்னால், காசநோய் கண்டு தாம்பரம் சானடோரியம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, 40 நாள் கழித்து இறந்து போகிறான்.


மத்திம வயதிலிருக்கும் எந்தவொரு மனிதனும் தான் கடந்து வந்த வாழ்க்கையின் நிறைவான, சுதந்திரமாக வாழ்ந்த கட்டங்களை பின்னோக்குகையில் அது பெரும்பாலும் அவனுடைய கல்லூரிக்காலமாகத்தானிருக்கும். இந்த சமயத்தில் ஏற்படுகிற நட்பு பெரும்பாலும் கல்லூரி வாசலை தாண்டினவுடனே அற்பாயுளில் மடிந்துவிடும் நிலையில், அதற்குப் பிறகும் அந்த நட்பை தொடரும் வகையில் சூழலை ஏற்படுத்திக் கொள்பவர்கள் பாக்கியவான்கள். அலுவலக இயந்திர வாழ்க்கையின் அலுப்பிலிருந்தும் குடும்பச் சிக்கல்களின் சலிப்பிலிருந்தும் விலகி எப்போதாவது கூடி தங்களைது கல்லூரி நினைவுகளை குடியின் துணையுடன் சிரிப்பும் கும்மாளமுமாக மீட்டெடுத்துக் கொள்ளும் அந்த கணங்கள் அற்புதமானவை. விதவிதமான குணச்சித்திரங்கள் நட்பு என்கிற ஒரே புள்ளியில் தங்களின் தற்போதைய அந்தஸ்தை மறந்து ஒரே சபையில் அமர்வது அற்புதமானவை. இந்த நிலையில் சக நண்பனின் மரணம் ஏற்படுத்தும் வலியும் துயரமும் வீர்யமிக்கவை.



'சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் மூவரும் எங்காவது பரிச்சயமே இல்லாத ஒரு இடத்திற்குப் போய்விடலாம் என்று கானல் காட்டின் பெரும்பாதையில் வந்து இறங்கியிருந்தோம் ' என்று ஒரு சிறுகதையின் ஆரம்பத்தைப் போல் திடுக்கென்று சம்பத்தின் மரணத்தைப் பற்றின ஆரம்பத்தோடு தொடங்குகின்ற இந்த நாவலில் சம்பத் என்கிற மனிதனின் ஆளுமையைப் பற்றின மற்றும் அவனுடைய மரணத்தைப் பற்றின வாசனையால் நிறைந்திருக்கிறது. அழகர், சம்பத், ராமதுரை, மாரியப்பன் என்கிற நால்வர் தமிழ் இலக்கியம் படிப்பதின் மூலம் நண்பர்களானவர்கள். இவர்களில் சம்பத் என்பவனின் மரணத்தைத் தொடர்ந்து அவனைப் பற்றிய நினைவுகள் அவனுடைய நண்பர்கள், காதலி, மனைவி போன்றவர்களால் இந்த நாவலில் விரிகிறது. சம்பத்தின் மரணத்தைத் தொடர்ந்து நடக்கிற மரண ஏற்பாட்டு நிகழ்வுகளும் இந்த நினைவுகளின் ஊடே சொல்லப்படுகிறது.



சம்பத்தான் இந்த நாவலின் மையப்பகுதியாகவும், ஆதார சுருதியாகவும் இருக்கிறான். அவனைப் பற்றின சித்திரம் இயல்பான வண்ணங்களால் திறமையாக தீட்டப்பட்டு இந்த நாவல் முழுவதும் நமக்கு தரிசனம் தருகின்றன. சம்பத்தின் ஆளுமைக்கூறுகள் நாவலில் ஆங்காங்கே சிதறியிருக்கின்றன. அவன் உங்களின் நண்பர்கள் யாராவையாவது உங்களுக்கு நினைவுபடுத்தக்கூடும் அல்லது நீங்களே சம்பத்தாகக்கூட உணரக்கூடும். தான் நினைத்தை உடனே நிகழ்த்திப் பார்க்க பிரியப்படுபவன்; தன்னிடம் உறைந்திருக்கும் பயத்தை மறைக்க மூர்க்கத்தனமாக நடந்து கொள்பவன்; தமிழிலக்கயம் படிக்கப்போய் நாத்திகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்படுபவன்; வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு போல்ட்டு, நட்டு விற்கிறவன்; பீர் குடித்து ஒத்துக் கொள்ளாமல் ஏறக்குறைய சாகப் போய் பிழைக்கிறவன், சில முறையே சந்திக்கிற பெண்ணை தீடாரென தீர்மானித்து ஒரு லாட்ஜ் அறைக்குள் திருமணம் செய்து கொள்கிறவன், அப்பாவை கட்டையால் ரத்தம் வர அடிக்கிறவன், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறிவிட்டு மறுநாள் மீன்குழம்பைப் பற்றி பேசுகிறவன் ... என சம்பத்தைப் பற்றின பல நிகழ்ச்சிகளின் மூலம் அவனைப் பற்றி பிரமிப்பாகவும், விநோதமாகவும் நமக்கு தோற்றமளிக்கச் செய்கிறவன். இதனாலேயே அவன் நண்பர்களால் கதாநாயகத்தன்மையுடனும் கூடவே வெறுப்புணர்ச்சியுடனும் பார்க்கப்படுகிறவன்.



காலமும் பரப்பும் குறுகியிருக்கிற காரணத்தினாலேயே இந்தப் படைப்பை நாவல் என்றழைக்க தயக்கமாயிருந்தால் ஒரு செளகரியத்துக்காக குறுநாவல் என்று வகைப்படுத்தலாம். 'நான் சம்பத்தின் கைகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ' (பக்22) போன்ற இலக்கணப் பிழைகள் நாவலின் இடையே நெருடுகின்றன. எல்லா நண்பர்களின் மூலமாகவும் சம்பத்தின் நினைவுகள் விவரிக்கப்பட்டுள்ளதால் எந்த நண்பரின் மூலமாக குறிப்பிட்ட பகுதி பதிவாகிறது என்பதில் சற்றே குழப்பமேற்படுத்தும் வகையில் நாவலின் நடை செல்வதை ஆசிரியர் முயன்றிருந்தால் தவிர்த்திருக்கலாம்.



முழுக்க கற்பனையினாலேயே எழுதப்படும் படைப்பை ஒரிரு பக்கங்கள் தாண்டினவுடனேயே ஒரு கூர்மையான வாசகன் அவதானித்து விட முடியும். மாறாக வாழ்க்கையின் அனுபவத்தின் சாரத்திலிருந்து எழும் நாவல்கள், வாசகனின் மனதில் இனம் புரியான நெருக்கத்தையும் தோமையையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இந்த நாவலெங்கும் யதார்த்தமும், உண்மையின் வாசனையுமாக உணர முடிவதால் சமீபத்திய வரவில் குறிப்பிடுத்தகுந்த படைப்பாக இதைக் கொள்ளலாம்

பெரும்பாலும் வாழ்வில் தோல்வி கண்டவர்களை மையமாக வைத்து எழுதப்படும் படைப்புகள் வெற்றி பெற்றிருக்கின்றன. வெற்றிக் கதைகள் எப்படி உற்சாகம் தருகின்றனவோ, அதேபோல் தோல்விக் கதைகள் இலக்கியமாகி இருக்கின்றன. இதுவும் தோல்விபெற்றவனின் வாழ்வையே பேசுகிறது.

வாடிவாசல் -சி.சு.செல்லப்பா




ஜெல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில்நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதற்கு வேண்டும். தான் போராடுவது மனிதனுடன் அல்ல. ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்குக் காத்துக் கொண்டிருக்கும்.

வாடிவாசல் குறித்து ஜெயமோகன்

உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. 'ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும் ' என்ற அசரீரிக் குரல் தமிழ மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.


காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜெல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை

இந்த நாவலின் கதாநாயகனான பிச்சி,அவன் கூட்டாளியும் மச்சினனுமான மருதன், அவர்கள் ஜல்லிக்கட்டின் போது சந்திக்கும் கிழவன், காரி காளையை வைத்திருக்கும் ஜமீன்தார் என்ற அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக வடிவமைக்கபட்டிருக்கின்றன.

ஒரே நாளில் நடைபெறும் சம்பவமாக இந்த கதை சித்தரிக்கப்பட்டு இருப்பது கதையின் விறுவிறுப்பை கூட்ட உதவுகிறது.தன் தந்தையின் உயிர் பிரிய காரணமாக இருந்த காளையை அடக்க வரும் ஒரு வீரனின் கதையை கச்சிதமாக வார்த்தைகளில் கூறுவதில் வெற்றி பெற்றுள்ளார் கதாசிரியர்.

வட்டார வழக்கில், அடுத்து என்ன நடக்கும் என நம்மை எதிர்ப்பார்க்க வைத்து இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் .

மாடு அணைவது ஐந்தறிவு மிருகத்திற்கும், மனிதனுக்கும் நடக்கும் நேரடி யுத்தம் இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை விட அந்த நேரத்தில் ஏற்படும் மனபோராட்டங்கள் மிக முக்கியமானவை.இடையிடேயே அந்த காலத்தில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரிய மனிதர்களுக்குமுன்

எவ்வளவு பணிந்து நடக்க வேண்டும் என்பதையும் மிக நுணுக்கமாக எடுத்து சொல்கிறது. ஜல்லிக்கட்டைப் பற்றி நமக்கு ஏற்படும் பல சந்தேகங்களை எளிய தமிழில் விளக்குகிறது.

40 வருடங்களுக்கு முன் வந்த இந்த நாவல் இன்னும் அழியாபுகழோடு இருப்பதற்கு காரணம் அதன் எளிய தமிழ் நடை மற்றும் களம்.

 

அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள் '

தமிழில் சினிமாவைப் பற்றி எழுதப்பட்ட நாவல்கள் என்று குறிப்பிடும்படியான ஒரு சில மட்டுமே இருந்தாலும் கரைந்த நிழல்களை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் இதை விட இன்னமும் சிறப்பாக சினிமா உலகத்தைப் பற்றிச் சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது.

கரைந்த நிழல்கள் - பிம்பங்களாகத் திரையில் வரும் நிழல்களுக்குப் பின்னால் கரைந்து போகும் மனிதர்களைப் பற்றிய கதை. இந்த நாவல் வழக்கமான கதை பாணியில் அமையாமல் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு கால இடைவெளிக்கு ஏற்ப அத்தியாயஙகளாக அமைந்த நாவல். திரைப்படம் என்னும் மாய உலகுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நாவல்.

கரைந்த நிழல்கள் குறித்து சா.கந்தசாமி

"கரைந்த நிழல்கள் போன்ற நல்ல நாவல்கள் தமிழில் நல்ல சினிமாவை அளிக்க இருக்கின்றன. அதனைக் கையாள ஒரு டைரக்டர் முன் வரவேண்டும். வராத வரையில் நாவலுக்கோ, நாவலாசிரியருக்கோ குறைவு ஒன்ரும் கிடையாது என்பது நாவலுக்குப் பெருமை தரும் விஷயமாகவே உள்ளது"


சினிமா சம்பந்தப்பட்ட எவ்வளவோ விஷயங்கள் - அவுட்டோர் - இண்டோர் ஷூட்டிங் பிரச்னைகள், அதற்கான முன்னேற்பாடுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள், தீர்வு காணும் முயற்சிகள், நடிகையின் முட், படத் தயாரிப்பாளரின் வீழ்ச்சி, படத்தின் வெற்றி-தோல்வி, படவுலகக் கவர்ச்சியும் பளபளப்பும், ஸ்டுடியோ நிர்வாகம், புது யூனிட் கட்டுதல், விநியோகமும் விளம்பரமும், இன்னபிற சினிமா விஷயங்களும் நம் கண் முன்னே காட்சிகளாக விரிகிறது.

முதல் அத்தியாயத்திலேயே நிஜமான சினிமா உலகத்தைக் காட்டும்போது திரையில் இதுவரை பார்த்து வந்த பிம்பங்களின் கவர்ச்சி போய்விடுகிறது. பெரும்பாலும் தன்னுடைய நாவல்களில் நனவோட்டம் என்ற முறையை அவர் வெகுவாகத் தவிர்த்துவிடுவதால், பாத்திரங்களின் செயல், பேச்சு ஆகியவற்றின் மூலம் கதை வளர்கிறது.

சினிமாவில் புரொடக்ஷன் மானேஜர் என்பவர் அந்தக் காலத்தில் விதிக்கப்பட்ட பத்தினிப் பெண்ணின் இலக்கணத்துக்கு ( ?) எந்தக் காலத்திலும் பொருந்திவர வேண்டியவர். எல்லோருக்கும் பின் தூங்கி முன் எழ வேண்டும். புரொடக்ஷன் மானேஜர் (தயாரிப்பு நிர்வாகி) நடராஜன், அதிகாலை மூணு மணிக்கு 'ஆறு ஷாட் மொத்தமே நூற்றைம்பது அடி ' படமெடுக்கவேண்டிய ஒரு குரூப் சாங்குக்கு வேண்டிய பிரயத்னங்களைப் பரபரப்புடன் பண்ணுவதில் துவங்குகிறது முதல் அத்தியாயம். வெறும் விடிகாலை நேரம் மட்டுமல்ல; தயாரிப்பாளர் ரெட்டியாரின் வீடு அடுத்தவாரம் அட்டாச்மெண்டுக்கு வரப்போகிற நேரம், பின்னால் ரெட்டியார் காணாமல் போய்விடுகிறார். அவரிடம் கடைசி நிலை ஊழியம் பார்த்த சம்பத் டைரக்டராகவோ, தயாரிப்பாளராகவோ உயர்ந்து விடுகிறான். பத்து தயாரிப்பாளர் போனால், 100 பேர் இண்டஸ்டிரிக்கு வருவது சினிமாவின் நிரந்தரம். அதன் உதாரணம் மேற்சொன்ன சம்பவம் என்று சொல்லலாம்.

கரைந்த நிழல்களின் மிகச்சிறப்பான அம்சம் மிகக்குறைந்த வரிகள் கொண்ட வர்ணிப்புகளாலும், சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் வாய்ப்பேச்சாக வரும் ஓரிரு வரிகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும் மறுத்துச் சொல்லமுடியாத 'வகை மாதிரியான ' கதாபாத்திரங்கள்தான். 'மாமண்டூரில வெத்திலை கிடைக்குமில்லே ? ' என்று கேட்கும் ராம்லால். பொங்கலுக்கு பூஜைபோட கோயம்புத்தூரில இருந்து பார்ட்டி வராங்க ' என்று சொல்லும், இன்டிபெண்டட்டாக படம் இயக்க இருக்கும் உதவி இயக்குனர் ராஜகோபால். உடையிலும், பாவனையில் எப்போதும் நாசுக்கு காட்டும் சிட்டி (எடிட்டிங் அஸிஸ்டென்ட்) இரண்டு நூறுநாள் படங்கள் கொடுத்த டைரக்டர் ராம்சிங்கைச் சுற்றி நாலைந்து நாற்காலிகள் இருந்தும் யாரும் உட்காராதது. ஸ்டூடியோ போகும் வழியில் தன் உறவினரை ஷூட்டிங் பார்க்க அழைத்துவர அவசரம் காட்டும் சம்பத். தன் வீட்டிலேயே மற்றவர்களுடன் நேராகக் கூட பேச இயலாத ராம ஐய்யங்கார். தான் வசனமெழுதிய படம் பிரபலமானதும் புதிதாக அரை டஜன் பட்டு ஜிப்பாக்கள் தைத்துக் கொண்ட கதாசிரியர். படம் போடச் சொல்ல அழைப்பு மணி இருந்தும் ஆபரேட்டர் ரூமுக்கே ஓடிப்போய் சொல்லிவிட்டு வருகிற பண்டிட்ஜி என்று உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இன்னொன்று, வாழ்க்கையின் ஈவிரக்கமற்ற, விசித்திரமான ரகசியச்சிரிப்பு - மிகவும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருப்பது. ஒரு இளம் நடிகையின் அலட்சியத்தினால் அழிந்த புரொடக்ஷன் கம்பெனி, அந்த கம்பெனியின் ஸ்கிரிப்ட்ஸ் ரிப்போர்ட்ஸ் முதலியவை கரையான்களால் அரிக்கப்பட்டு அரைப்படி தூசாக மக்கிப்போன கதை. ராம ஐயங்காரின் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்கள் ஏதோ ஒரு மொழி வெறி இயக்கத்தினால் தவிடு பொடியாவது, சம்பத்தின் உயர்வு, நடராஜனின் தாழ்வு இன்னபிற.

அந்தக்காலப் படங்களில் வகுக்கப்பட்ட இலக்கணமாக, கால இடைவெளியைக் குறிக்க fade in, fade out என்கிற உத்தியைக் கடைபிடிப்பார்கள்(இப்போதெல்லாம் வர்ஜா வர்ஜியமில்லாமல் cut to cut தான்) கால நீட்சியை ரஸிகன் தானும் உணரத்தக்க வகையில் அமைந்த கட்டுக்கோப்பு அந்த உத்தி. அதே பாணியில், நான்கு sequenceகளை பத்து அத்யாயங்களாக அமைத்துக் கொண்டு நாவலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். சில அத்யாயங்கள் நாவலுக்கு பொருந்தி வராதது போலத் தோற்றம் காட்டினாலும், ஏதோ ஒரு வகையில் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருப்பது உன்னிப்பாக பார்க்கும் போது புலனாகும்.

உதாரணமாக ராம ஐயங்காரும் அவரது மகன் பாச்சாவும் பேசிக்கொள்வதும், சற்றே புத்திசாலித்தனம் துருத்திக் கொண்டு தெரியும் ஒற்றைவரி வாதப் பிரதிவாதங்களினால் அமைக்கப்பட்ட ஒன்பதாம் அத்யாயத்தின் முன்பகுதி, கடைசியில் வருகிற கிட்டத்தட்ட மூன்று பக்க அளவுள்ள ராமாஐயங்காரின் அறிக்கை போன்ற நீளமான பேச்சினால் ஈடுகட்டப்பட்டுவிடுகிறது. அது வெறும் லெளகீக வாதியின் விருதாவான அறிவுரை அல்ல! எந்த ஓர் முந்தைய தலைமுறை மனிதனும் தனக்குத்தானே வெற்றியை தேடிக்கொண்டவன் என்ற ஹோதாவில், அடுத்த தலைமுறை மனிதனுக்குத் தன்னை வெளிப்படுத்தி பின்னவன் குறையை குத்திக்காட்டும் மாறாத தீவிரமாகத்தான் தோன்றுகிறது. நாவலின் இறுதியில் நெருடுகிற விஷயங்கள் இரண்டு. ஜெயச்சந்திரிகா, ராஜகோபாலைத் திருமணம் செய்து கொள்வது, நடராஜனின் வீழ்ச்சி. இரண்டுமே கதாபாத்திரங்கள் சம்பந்தப்பட்டவை. முதல் இருவர் தொடர்பான முடிவுக்குக்கூட 'யாரும் அதிகம் லட்சியம் செய்ய வேண்டியிராத ஒருவனிடம் அசாதாரண கவனம் காட்டுவது ஜெயச்சந்திரிகாவின் இயல்பு ' என்று ஆசிரியர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கும் வர்ணனையிலிருந்து 'அது அப்படி நேர்ந்திருக்கலாம் ' என்று உத்தேசிக்க முடிகிறது. நடராஜன் கதாபாத்திரத்தின் முடிவை ஆசிரியர் வேறு மாதிரி வார்த்திருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.

கதைப்படங்கள் ஒரு டாக்குமெண்டரிப் படச்சூழலிலும், டாக்குமெண்டரிகள் ஒரு கதைப்படத் தொனியிலும் அமைக்கப்படுகிறபோது, ஆழ்ந்த கனம் கூடும் என்ற ட்ரூபோ சொன்னதாக ஞாபகம். அந்தப் பாணியில் நிறைய 'கதைகள் ' ஒரு உலகத்தை எந்தக் கதையுமில்லாமல் படம் பிடித்துக் காட்டியிருப்பது அசோகமித்திரனின் திறமை.

ஸ்டூடியோ சிஸ்டம் பிரபலமாக இருந்த காலகட்டத்தை மையமாகக் கொண்ட நாவல் இது. தற்போது பற்பல மாற்றங்கள் வந்து விட்டன. எந்த சினிமாக் கம்பெனிக்கும் இப்போதெல்லாம் ஸ்டூடியோக்களில் நிரந்தர அலுவலகம் கிடையாது. ஏனெனில் ஸ்டூடியோக்களே நிரந்தரமில்லை (படப்பிடிப்புக்கு) என்கிற அளவு தணித்துப் போய்விட்டது. ஆளாளுக்கு கேமராவை தோள்மீது தூக்கிவைத்துக் கொண்டு வயக்காட்டுப் பக்கம் போய்விடுகிறார்கள். ஆகாத மாமியாரை பார்க்கப்போகும் மருமகள் போல் எப்போதாவது ஒரு தடவை setwork, பேட்ச் வொர்க் என்று தான் ஸ்டூடியோ பக்கம் தலைக்காட்டுக்கிறார்கள். இப்படி மேற்போக்கான மாற்றங்கள் நேரிடினும், அடிப்படையில் கரைந்த நிழல்கள் இன்றும் படிக்கப் புதிதாக இருப்பது அதன் ஆச்சரியம்.

இந்த நாவலில் ஆசிரியர் சினிமா உலகத்தை முழுக்க விண்டு காட்டிவிட்டாரா ? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அது ஆசிரியரின் நோக்கமும் அல்ல.

தனக்கு நேர்கிற அனுபவங்களையும், அதனால் பெறப்படும் சிந்தனைகளையும் சார்ந்து எந்த ஒரு பிரச்னை குறித்தும் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்து சேர்வது சாத்தியம் என்றே மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால், எந்தவொரு தீர்மான அபிப்ராயங்களுக்கும் இடம் தராதது வாழ்க்கை. அப்படிப்பட்ட கருத்துக்களைக் குறித்து எள்ளை நகையாடி கெக்கலிகொட்டிச் சிரிப்பது வாழ்க்கை. எனில், அதன் மிகச்சிறிய பகுதியான சினிமாஉலகத்துக்கும் இது பொருந்தக்கூடும். கடலுக்கு உண்டான நியாயம் அதன் துளிக்கும் உண்டுதானே ? இதை அறியாதவரா என்ன அசோகமித்திரன் ?

சினிமா என்னும் மிகப் பிரம்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தும் நாவல் கரைந்த நிழல்கள். சினிமா உலகத்தில் தானாகவே உருவான சட்ட திட்டங்கள்; அந்தச் சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோ முதலாளிகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், புரொடக்ஷன் - புரோகிராம் மேனேஜர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துணை நடிகர்கள் என்று பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை பெரும்பாலும் சினிமாவைப்போல் வண்ணமயமாக அமைந்துவிடுவதில்லை. திரையில் பயிரிடும் கனவுகளுக்காக வாழ்வின் கனவுகளைச் சிதைத்து உரமாக்கும் வர்க்கம் குறித்த இப்படியொரு யதார்த்தம் குலையாத நாவல் இதற்கு முன்னும் பின்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை.

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் படைப்பியக்கத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் அசோகமித்திரன், ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவரது பல படைப்புகள் இந்திய-அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. இந்த நாவல் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளது. அசோகமித்திரன், 'அப்பாவின் சிநேகிதர்' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 1996-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
விலை: ரூ.60


Saturday, December 23, 2006

சுந்தர ராமசாமியின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்'

க.பஞ்சாங்கம்
மூலம்:thinnai.com

ஆலப்புழையில் 15 பிள்ளைகளோடு பிறந்த எஸ்.ஆர்.எஸ் தந்தை தலைகீழாகக் கவிழ்ந்தபோது சிதறிய நெல்லிக்காய்களில் ஒன்றாய் கோட்டயம் வந்து விழுகிறார். ஒரு கதை மாந்தர் போல நாவலில் வரும் 'ஸ்ரீநிவாஸ் ' என்ற வீடு, எஸ்.ஆர்.எஸ்,. அவர் மனைவி லட்சுமி,. தொடர்பு வைத்துள்ள ஒரே சகோதரி பங்கஜம், அவர் கணவன் அனந்து, பிள்ளைகள் பாலு, ரமணி, கல்விகற்க ஸ்ரீநிவாஸ் வந்து சேர்ந்த லட்சுமியின் தங்கை வள்ளி, அதரவற்ற அனந்தம், வேலைக்காரி கெளரி, கணக்கெழுதும் கரீம் மாப்ளே - இது ஒரு குடும்பம். ஒன்று விட்ட சித்தப்பா பையன் சாமு, அவன் மனைவி சீதா, பிள்ளைகள் லச்சம், கோமு இது ஒரு குடும்பம். எஸ்.ஆர்.எஸ்-இன் மாமா சேது அய்யர், அவரது பிள்ளைகள் லட்சுமி, வள்ளி, கோமதி, கோபு, வாசு, மாது, மருமகள் ருக்கு-இது ஒரு குடும்பம்; டாக்டர் பிஷாரடி, பைத்தியமான அவர் மனைவி சாவித்திரி, பிள்ளைகள் ஸ்ரீதரன், சுகன்யா, அப்புக்குட்டன் -இது ஒரு குடும்பம்; கைலாசமடம் நாராயண அய்யர் குடும்பத்தின் வாரிசுகளான கைலாசமடம் சுப்ரமணியம், ஐந்தாவது மகன் சம்பத் இப்படி ஒரு குடும்பம். சனிக்கிழமை பிற்பகலில் வேனல் பந்தலில் செங்கல்சூளை கருநாகப் பள்ளி, ஆசிரியர் காந்தியவாதி கோவிந்தன் குட்டி, அவர் சீடர் செல்லப்பா, டாக்டர் பிஷாரடி, தேயிலைக்கம்பனியின் பிரதிநிதி சம்பத், பிடில் ராமய்யர், கைலாசமடம் சுப்ரமணியம், கே.ஆர் நீலகண்டப்பிள்ளை;எஸ்.ஆர்.எஸ்இன் பெயரைக் கெடுக்கவென்று அவதாரம் எடுத்துள்ள புதுப்பணக்காரன் -அரசியல்வாதி - அவுரான் மாப்ளே, எலிசபெத் டாச்சர், இவர் கணவர் -கோட்டயம் காந்தி என்று அழைக்கப்படும் ச.எம்.தோமஸ், கார்த்தியாயினி, பலருடனான பாலியல் உறவுக்கு பலியாகி அழியும் நாராயணி, லச்சத்தை தவறான உறவுக்குப் பயன்படுத்தும் வைத்தியர், வாழைத்தோட்டம், லட்சுமியின் ஆஸ்த்மா நோய், டாக்டர் மேத்யூ தரகன் என்று வருகின்ற பல்வேறுபட்ட மனித உறவுத் தளத்தில் நிகழ்த்தப்படும் மொழியாடலில் கரைந்து கிடக்கும் சூட்சமங்களையும், இடுக்குகளையும் மெளனங்களையும் வக்கிரங்களையும் தனக்கான மொழியில் பதிவு செய்வதே நாவலின் இயக்கமாக அமைகிறது 'மனித மனங்கள் எவ்வளவு வக்கிரமாக ஒன்றையொன்று பின்னி முடிச்சு போட்டுக் கொண்டு விடுகின்றன ' (ப.591) நாவல் முழுக்க இதை வெளிக் கொணரத்தான் முயற்சி நடப்பதுபோலத் தெரிகிறது.

ஊதாரியான அப்பனுக்குப் பிறந்த பிள்ளை 'லச்சை ' மிகவும் புத்திசாலிப் பையனாக இருந்தும், தான் தோன்றித்தனமாய்ச் சுற்றியதால் யாருக்கும் பயன்படாமல் போய்ப் பிணமாக வந்து வீட்டுக்குள் விழுகிறான். தன் விருப்பம் போல் உருவொக்கச் சிலத் தந்திரமான நடவடிக்கைகளை மகன் மேல் செலுத்தியதன் மூலம், குடும்பத்தையே நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறார் எஸ்.ஆர்.எஸ்.


மேலும் பெருந்தன்மையோடு, ஆதரவின்றி வந்த விதவை ஆனந்தத்திற்கு வாழ்வு கொடுத்தார். தன்னோடு இணைத்து நினைத்துப் பார்ப்பதில் ஒரு சுகம் கண்டார். அவளும் இப்பொழுது ஒரிரவில் செல்லப்பாவுடன் ஓடிவிட்டாள். தன் வீட்டில் இருந்து கல்வி கற்க வந்த கொழுந்தியாள் வள்ளியும், வேறு சாதியிலுள்ள ஸ்ரீதரனைக் காதலிக்கிறாள். அவனோடு இணைத்து வைக்க எந்த முயற்சியும் செய்யாமல், அப்பன் வந்து கூப்பிட்டுப் போகும்போதும் 'சும்மாவே ' இருந்து விடுகிறார்.

கடைசியில் எல்லாம் சூனியம்தானா ? வேனிற் சபையில் காரசாரமாக விவாதித்தவை எல்லாம் வீண்தானா ? 'துல்லியமாய்ச் சிந்திப்பவன் செயலுக்கு ஆகமாட்டான்! என்பதும் உண்மையா ? கதைசொல்லி நம்மைச் சூன்யத்தில் தள்ளவில்லை. புதிய பிறவி எடுக்கச் சொல்கிறார். செத்த பிறகு தான் புதிய பிறவி என்பதில்லை. இந்த இப்பிறவியிலேயே பலப்பல புதிய பிறவிகளை உற்பத்திச் செய்து கொள்ள முடியும். அதற்கு என்ன வழி ? தட்டுமுட்டுச் சாமான்களைத் தூக்கி கொண்டு இடம் பெயர்ந்து விடுவதுதான் அந்த வழி. நாடோடியாகு! எந்த அளவிற்கு உன்னை நாடோடியாக்கிக் கொள்கிறாயோ அந்த அளவிற்கு இங்கே வாழ்க்கை வாழத் தக்கதாக இருக்கும். அறியத் தக்கதாக இருக்கும். நம்முடைய வனங்களிலும் மலைகளிலும் காடுகளிலும் காய்ந்த நிலப்பகுதிகளிலும் அலைகிற சிலப்பதிகார, இதிகாசக் கதை மாந்தர்கள் நினைவுக்கு வருகிறார்கள்; அப்படி அலைந்தாலும் இந்த மனித உயிருக்கு விடுதலை சாத்தியம்தானா ? பனி பொழியும் காலையில் நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு சில்லான் தார்ச்சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு மூச்செடுத்து ஓடிப் புல்தரையை அடைந்தவுடன் 'பார்த்தாயா! உன் காலில் மிதிபடாமல் பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டேன் ' என்று தலையைத் தூக்கிப் பேசுவதுபோல் தோன்றுகிறது.

 இந்த நாவல் நிறைய வெளிகளோடும், மெளனங்களோடும் படைக்கப்பட்டிருக்கிறது. பிராம்மணர்களைப் பற்றிய இடங்களில் மட்டும் பிராமணப் பேச்சு நடை; மற்ற இடங்களில் எழுத்து நடை எனப் பின்பற்றப் படுகிறது. மிகவும் கவனமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.


 

Friday, December 22, 2006

சிறந்த சிறுகதைகள்


சிறந்த சிறுகதைகளாக சுஜாதா  இவ்வற்றை பட்டியலிட்டுள்ளார (கற்றதும் பெற்றதும்)


புதுமைப் பித்தன் - மனித இயந்திரம்

கு.ப.ராஜகோபாலன் - விடியுமா

தி.ஜானகிராமன் - சிலிர்ப்பு

லா.ச.ராமிருதம் - கொட்டு மேளம்

கு.அழகிரிசாமி - அன்பளிப்பு

சுந்தர ராமசாமி - ப்ரசாதம்

அ.மாதவன் - நாயணம்

ஜெயகாந்தன் - அக்னி ப்ரவேசம்

ஜெயமோகன் - பல்லக்கு

வண்ணதாசன் - நிலை

கிருஷ்னன் நம்பி - மருமகள் வாக்கு

நாஞ்சில் நாடன் - வாக்குப் பொருக்கிகள்

அசோகமித்ரன் - புலிக் கலைஞன்

கிருஷ்னமுர்த்தி - மனிதர்கள்

இந்திரா பார்தசாரதி - அசலும் நகலும்

இரா. முருகன் - உத்தராயணம்

சு.சமுத்ரம்(!) - நான்காவது குற்றச்சாட்டு

ரா.கி.ர - செய்தி

தங்கர்பச்சான் - குடி முந்திரி

சிவசங்கரி - செப்டிக்

ராஜம் கிருஷ்னன் - மாவிலைத் தோரணம்

பிரபஞ்சன் - மீன்

கி.ராஜநாரயணன் - கதவு

சுந்தரபாண்டியன் - களவு

வண்ணநிலவன் - எஸ்தர்

திலீப் குமார் - கடிதம்

சோ.தருமன் - நசுக்கம்

நாகூர் ரூமி - குட்டியாப்பா

ராமசந்தர வைத்தியநாதன் - நாடக காரர்கள்

பாமா - அண்ணாச்சி

சுஜாதா - மகாபலி

 

அம்மா வந்தாள்-தி.ஜானகிராமன்


அம்மா வந்தாள் பற்றி ஜெயமொகன்

மரபான தமிழ் ஒழுக்கவியல் மீது ஃபிராய்டியம் ஓங்கி அடித்ததின் விளைவு. அலங்காரத்தம்மாள் தன் ( நெறிதவறியதனால் விளைந்த) குற்ற உணர்வை வெல்ல மகன் அப்புவை வேத பண்டிதனாக்க முயல்கிறாள். நெறிகளுக்கு அப்பால் உள்ள காதலின் தூய்மையை அப்பு உணர்ந்து தன்னை விரும்பும் இளம் விதவை இந்துவை ஏற்கிறான். ஜானகிராமனின் படைப்புகளில் வரும் 'காமம் கனிந்த ' அழகிய பெண்கள் தமிழ் வாசகனுக்குள் பகற்கனவை விதைத்தவை. பாலகுமாரன்கள் முளைக்கும் நாற்றங்கால்.


பத்து சிறந்த தமிழ் நாவல்களில் இந்நாவல் கண்டிப்பாக இருக்கும்

மரபுகள் ஒருவகையில் நமக்கு வேலிகளே. தொகுக்கப்பட்டு, கட்டாயப் படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்த பழக்கவழக்க வாழ்க்கை முறைகளைத்தான் மரபு என்று குறிப்பிடுகிறோம். தேர்வுகளுக்கு மாதிரி வினாத்தாள் கிடைத்து விடுவது போல இம்மரபு வழிகளில் பழகிய செயல்முறை நமக்கு முன்மாதிரியாக உடனடியாகக் கிடைத்து விடுவதால் பல கேள்விகளை எதிர்கொள்வது எளிமையாகி விடுகிறது. பழகிப் பழகி, மரபுகள் சுட்டிக் காட்டுகிற பழக்க வழக்கங்களே மனிதமரபு என்கிற மயக்கத்துக்கு ஆட்பட்டு விடுகிறோம். மனித மரபு, நாம் வரித்துக் கொண்ட மரபுகளை விட விரிவானது என்கிற நிதானத்தை இழந்து விடுகிறோம். மனித மரபை விட நாம் கட்டிக் காத்து வரும் மரபே உயர்வானது என்கிற எண்ணத்துக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். அதனால் நாம் வாழும் எதார்த்த மரபுச்சூழலில் விடை அறிய முடியாத கேள்வியொன்றை எதிர்கொள்ளும்போது தடுமாறுகிறோம். அதை மனிதமரபிலும் வரலாற்றிலும் வைத்துப் பார்ப்பதற்கு மாறாக, நமக்குப் பழகிய மரபின் பின்னணியில் மட்டும் பார்த்து உடனடியாக ஒரு குற்றப் பத்திரிகையை வாசித்து விடுகிறோம். குற்றம் சுமத்தி பிரச்சனைக்குரிய ஒன்றை வேலிக்கு மறுபக்கம் தள்ளினால்தாம் நமக்கு நிம்மதி ஏற்படுக்ிறது. மரபுக்கு நம்மால் எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற அச்சமும் அப்படி நேரும்போது அதைத் தொலைத்துக் கழுவி மரபைத் துாய்மை செய்ய வேண்டியது நம் கடமை என்றும் அப்பாவித்தனமாக நம்பி விடுகிறோம்.

ஒரு வேதம் படிக்கும் இளைஞன் ஒரு இளம் விதவையிடம் ஈர்க்கப்படுகிறான் ,இறுதியாக அவளுடன் திருமணம் செய்துகொள்ளாமலே வாழ துணிகிறான்.இவன் சகோதரர்களில் பாதி பேர் ,இவன் அம்மா வேறோருவரிடம் கொண்ட உறவினால் பிறந்தவர்கள்.இவன் அப்பா அவளுடனே வாழ்கிறார்.அந்த குடும்பம் நிலையில்லா மௌனத்தில் தத்தளிக்கிறது.ஒருவன் யாரிடம் பழக வேண்டும் யாரிடம் பழக கூடாது என்று தீர்க்கமான விதிகளை நிறுவும் சமூகம் , அவ்விதிகள் மீறப்படும் போது ஒன்றும் செய்ய முடியாத  நிலையில் இருக்கிறது

'அம்மா வந்தாள் ' நாவலில் மரபின் முன்னிலையில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. இரண்டையுமே எதிர்கொள்கிறவன் அப்பு. தாயாரான அலங்காரத்தம்மாளின் கூடா ஒழுக்கம் ஒரு கேள்வி. விதவையான இந்துவின் அன்பை ஏற்றுக் கொள்வது எப்படி என்பது இரண்டாவது கேள்வி. இரு கேள்விகளுமே பெண் சார்ந்தவை. எதிர்கொள்பவன் ஆண். வேதங்களின் உண்மையையும் அழகையும் பதினாறு ஆண்டுகள் தொடர்ச்சியாக விடாமல் படித்துத் தெரிந்து கொண்ட ஓர் ஆண்.

இரண்டு கேள்விகளாலும் உடனடியாக அவன் நிலைகுலைந்து விடுகிறான். எவ்வளவுதான் வேதம் படித்து உண்மையின் நுட்பம் புரிந்தவனாக இருந்தாலும் சராசரியான வாழ்க்கை மரபில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கக் கூடிய மற்றவர்களைக் காட்டிலும் மிக அதிக அளவு நிலைகுலைந்து விடுகிறான். எட்டு வயதில் அப்பா கொண்டு வந்து விட்டபோது இருந்த மனநிலையிலேயே அவன் பதினாறு ஆண்டுக் காலம் ஓட்டி விடுகிறானே தவிர, அந்த எட்டு வயது மனநிலை அவனிடம் மாறவே இல்லை. எட்டு வயதில் சக மாணவர்கள் காட்டாமணக்குச் செடி மறைவில் புகைபிடித்துக் கொண்டு உட்கார்ந்த போது உதட்டைக் கடித்து, விசித்து, விம்மி அழுது தீர்த்த அதே அப்புவைத்தான் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தாயாரின் உறவுச் சிக்கலை அறிந்து குமுறி அழுகிறவனாகவே பார்க்கிறோம்.

.

ஒரு ஆசாரமான பிராமண குடும்பத்தின் பிண்ணணியில் எழுதபட்டிருக்கும் இந்நாவல் கட்டுகோப்பான கதை மற்றும் உயிருள்ள கதைமாந்தர்களை கொண்டது.

தி.ஜா வின் பிற நூல்களை (மோகமுள்,உயிர்த்தேன்,அன்பே ஆரமுதே) போல் அல்லாமல் இந்நூலில் ஆழமான பகுப்பாய்வுகளில் அவர் இறங்கவில்லை.மேலும் எப்போதும் போல் படிப்பவர்களிடமே முடிவை விட்டுவிடுகிறார்.இதுவே தி.ஜா வின் பலம்.

இந்த (சர்ச்சயைகுரியாதாக்கப்பட்ட)நாவல் கலகியில் 1968ல் தொடர்கதையாக வந்ததேன்பது ஒரு ஆச்சிரியம்




 

Sunday, December 17, 2006

சோளகர் தொட்டி

ஆசிரியர்: ச.பாலமுருகன்
விமர்சினம் செய்தவர் : நண்பன்
மூலம் : தமிழ்மன்றம்.காம்

வீரப்பனைப் பற்றி அனைவரும் அறிவோம். ஆனால் அவனைச் சுற்றி வாழ்ந்த மக்களை அறிந்திருந்தோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த மக்களின் எளிய வாழ்க்கை முறை, வனத்துடன் இணைந்து வன விலங்குகளுடன் தாங்கள் வாழ்ந்த வெளியை பங்கிட்டுக் கொண்டு இயைந்து வாழ்ந்த பாங்கு, அவர்களின் இசை, நடனம், இவற்றோடு எளிய மருத்துவமாக கஞ்சா புகைத்தல் என்று ஒரு சிற்றோடை போல வாழ்க்கை இனிதாக ஓடிக் கொண்டிருக்கும்பொழுது அத்தகைய வாழ்க்கை நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் வியாபித்து நிற்கையிலே, மலையினூடாக மர்மமனிதர்கள் இரவில் தீவட்டிகளுடன் நடமாடுகின்றனர்.

வனத்தின் வளங்களைத் தொடுவது தெய்வ குற்றம் என்று அறிவுறுத்தி வளர்த்தெடுக்கப்பட்ட அந்த மனிதர்கள் அச்சத்துடன் இரவுகளைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். மர்ம மனிதர்கள் நடமாட்டம் அதிகரிக்க அதிகரிக்க காவல்துறையும் வந்து சேருகிறது. அத்துடன் அரசின் அதிகாரிகள் என்று நகர நாகரீகம் வந்து சேர, லஞ்சம், அதிகாரம் என்று அனைத்துக் கூறுகளும், புரியாத அந்த மக்களின் வாழ்க்கை முறையை நாசம் செய்யத் துவங்குகின்றன.

தங்கள் வயல்களை இழக்கத் தொடங்குகின்றனர். காவல்துறையைக் கண்டு அஞ்சி காட்டிற்குள்ளே ஓடி ஒளிகின்றன. என்றாலும் காவல்துறை விரட்டுகிறது. ஒன்று கர்நாடகம் அல்லது தமிழ்நாடு. நமக்கெல்லாம் தான் மாநில எல்லைகள் அத்துபடி. ஆனால் அந்த மலைவாழ் மக்களுக்கு எந்த எல்கைகளும் இல்லை. உறவுகள் அந்த எல்லை என்ற மாயக்கோட்டின் இரு பக்கங்களிலும் விரிந்திருக்கின்றன. ஆனால் காட்டிற்குள்ளே செல்லவே அச்சப்படுகின்றனர்.

மற்றொருபுறம் அவர்களுக்கு வனக்குற்றவாளிகளிடமிருந்து சிறு சிறு வேலைகள் - பல மடங்கு சம்பளத்துடன். சிலர் அதனால் கவரப்பட்டு அவர்களுக்கு உதவவும் ஆரம்பிக்கின்றனர். ஒரு கிராமத்தில் ஒருவர் அல்லது இருவரென.

காவல்துறை தன் பங்குக்கு எந்த குற்றச்சாட்டுமின்றி கிராமம் கிராமமாக கைது செய்து இழுத்து வருகின்றனர். ஆண்கள் சிக்கவில்லையென்றால் அவர்களுக்குப் பகரமாக - பிணையாக பெண்கள். அத்துடன் அவர்களது பெண்மையும். தெய்வமாக கருதப்பட்ட வனத்தின் புதர்களிலே கிடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்படுகின்றனர். ஒருவரால் அல்ல பலரால். அது போதாதென்று மற்ற சித்திரவதைகள். பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு துன்புறுத்தல், வலியிலும் வேதனையிலும் துடிக்கும் அவர்களை மேலும்

அவமானப்படுத்த பலரின் முன்னிலையில் நிர்வாணமாக்கி கட்டிப் போடுதல் என்று பலவகையிலும் வன்கொடுமை நிகழ்த்தப்படுகிறது. யாராவது கொடுமைகள் தாங்காது பலவீனமாகி சாகும் தருவாயில் இருந்தால், உடன் அவர்களுக்கு வீரப்பன் ஆட்களின் உடைகள் உடுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு காட்டில் வீசப்பட்டுவிடுவர் - மோதலில் குண்டடிபட்டு இறந்ததாக.

கதையின் நாயகனாக பிரதானப்படுத்தப்படும் சிவண்ணா என்ற சோளகன் கதை தான் அது. சோளகர்களின் பழக்கவழக்கம் சற்று விநோதமானது. பெண் தன் கணவனல்லாத பிறனுடன் போக வேண்டுமென்றால், பிரிந்து கொள்கின்றனர் - பெரிய வருத்தமின்றி. கணவனை இழந்த பெண் அவனது தம்பியை உரிமை கோரிப் பெறுகிறாள். இன்னும் இன்னும் இது போன்ற பல பழக்க வழக்கங்களும் இயல்பாய் வெளிப்படுகிறது. பிள்ளைகளை அடிப்பது என்ற வழக்கமே இல்லாத அவர்கள், பிறகு தங்கள் குழந்தைகள் காவல் துறையால் அடிக்கப் படும் பொழுது துடித்துப் போய் விடுகின்றனர்.

சந்தர்ப்ப வசத்தால் சிவண்ணாவும் - வனத்துறையில் பணி செய்தாலும் - காவல்துறையால் கைது செய்யப்படுகிறான் - எந்தக் காரணமுமின்றி. காவல்துறையின் கொடூரம் தாங்காது காட்டிற்குள்ளே தப்பி ஓடும் பொழுது தற்காலிகமாக வீரப்பனைச் சந்திக்க சில நாட்கள் அவனுடனே வாழ நேரிடுகிறது. காவல்துறையோ அவனது மனைவியையும், மகளையும் கடத்திக் கொண்டு போய் துன்புறுத்துகின்றனர். பாலியியல் பலாத்காரத்திற்குள்ளாகின்றனர்.

சிவண்ணா இறுதியாக நீதிமன்றத்தில் சரண்டைவதாகக் கதையை முடித்துக் கொள்கிறார் ஆசிரியர். எல்லாம் நீதிமன்றம் தான் வழி. ஆனால் நீதிமன்றத்திற்கு அனைத்தும் வருமா?

பத்திரிக்கைகள் கட்டிய கதைகளை மட்டும் தான் கேட்டோம். ஆனால் அந்த மக்களுடன் பலவருடங்கள் பழகி, அவர்களுக்காக உழைத்து வரும் ஒரு வழக்கறிஞரால் எழுதப்பட்டுள்ளது.

எளிய அலங்காரமில்லாத மொழி நடை. இலக்கிய இசங்களில் வழுக்கி விழுந்துவிடாமல் ஆனால் அதே சமயம் சுவை குன்றி விடாமல் விறுவிறுப்பாக எழுதியதற்காக பாராட்டலாம். மொழி நடை, கதை சொல்லும் உத்தி என்பனவற்றையெல்லாம் மீறி வாசிக்க வைக்கிறது என்றால் அதற்குக் காரணம் கதையின் கரு தான். வாசித்துப் பாருங்கள் - ஆரம்ப பக்கங்களில் அந்த இடங்களிலெல்லாம் போய் வாழ்ந்து பார்க்கலாம் என்று தோன்ற வைத்து பின்னர் நாட்செல்லச்செல்ல இப்படிக் கூட மனித மிருகங்கள் சட்டத்தின் துணை கொண்டு நடந்து கொள்ளுமா என்று அஞ்சச் செய்யும்.

கதையை வாசித்து முடித்த பொழுது தோன்றியது:
வீரப்பனைக் கொன்றாகிவிட்டது. ஆனால் வீரப்பன் அளவிற்குக் கொடுமை செய்த அந்த சிறப்புப் படைகுற்றவாளிகளுக்கு தண்டனையே கிடையாதா?

நீதி தெருவில் தான் வழங்கப் படும் என்றால் - வீரப்பன் செத்துப் போகவில்லை என்றே தோன்றுகிறது. ஆமாம்அந்த காவல்துறை குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை என்றால் இன்னும் சிலபல வீரப்பன்கள் தோன்றக் கூடும்.


வனம் வெளியீடு,
17 பாவடித் தெரு,
பவானி 638 301
தொலை பேசி எண்: 94432 133501.விலை 100 ரூபாய்

Wednesday, December 6, 2006

ஆதவனின் "காகித மலர்கள்"



காகித மலர்கள் பற்றி ஜெயமோகன்

"நகர வாழ்வின் அலுப்பையும் அதை வெல்ல மூளையை பயன்படுத்தும் போது ஏற்படும் எண்ணவலைப் பின்னலையும் நக்ர்புறக் கதாபாத்திரங்களின் கோழைத்தனத்தையும் சுயமையப் போக்கையும் அழுத்தமான எள்ளலுடன் சித்தரிக்கும் 'டெல்லி ' நாவல். "

வாசகர் வட்டம் ப்லொகிலிருந்து விமர்சின துளிகள்

விமர்சினம் செய்தவர்--சித்ரா ரமெஷ்

"நாவல் விசுவத்தை மையமாகக் கொண்டு விசுவத்தின் அம்மா அப்பா சகோதரர்கள் நண்பர்கள் என இவர்களைச் சுற்றி நடக்கிறதா? செல்லப்பாவைச் சுற்றி இயக்குகிறதா? இல்லை கணேசனைப் பற்றியா? என்பதை உணரும் முன் முடிந்து விடுகிறது. பல மனிதர்கள், அவர்களின் உள்மனம், வெளியுலக வேஷம், போடும் வித வித முகமூடிகள் இவற்றிற்கிடையில்ஆதவனின் நாவல் ஒரு கொலாஜ் வடிவ ஓவியமாக தீட்டப்பட்டிருக்கிறது. சிறு சிறு சிதறல்களாக பார்க்கும் போது இது எப்படி ஓவியமாகும் என்ற கேள்விக்குறி, ஆனால் முடிந்த பிறகு ஒரு அற்புதக் கலை வடிவம். இதுதான் ஆதவனின் காகித மலர்கள்நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அம்சமான புலம் பெயர்தல். கிராமங்களை விட்டு நகரத்திற்கு நகரும் மனிதர்கள். எந்த இடத்தில் எப்படி வாழ்ந்தாலும் தன்ஆசார அனுஷ்டானங்களைக் கை விடாமல் வாழும் மத்தியதர பிராம்மணக் குடும்பங்கள்! அதன் உண்மையான அர்த்தங்கள் திரிந்து போய் வேறு விதமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்தப் பின்னும் தமிழ் நாட்டுக் கிராமத்தில் ஒரு அக்ரஹாரத்தில் வாழும் வாழ்க்கையைத் தொடரும் மேம்போக்கான மனிதர்கள். உள்மனதில் தோன்றும் எண்ணங்கள், வெளியில் அதற்கு முகப் பூச்சுப் பூசி காட்டும் நாசூக்குத்தனம், தன்னைப் பற்றிய சுய மதிப்பீடுகள்இ வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகள், கண்ணோட்டங்கள், அவரவர்கள் இடத்திலிருந்து பார்க்கும் போது மாறுபடும் கோணங்கள். மனதிற்குள் எத்தனைப் பெரிய குப்பைத்தொட்டி ஒளிந்திருந்தாலும் வெளியில் ஒரு புன்னகைப் பூங்கொத்தை நீட்டி பொய்யான மதிபீடுகளால் தன்னை உயர்த்திக் கொள்ளுதல் போன்ற வாழ்க்கை சாகசங்களை தானே வெளியில் நின்று பார்த்து எழுதியிருக்கிறார்ஆதவன் என்பதை மட்டும் சற்றுப் புன்னகையோடும் வேதனையோடும் ரசிக்க முடிகிறது"

மேலும் படிக்க "http://vasagarvattam.blogspot.com/2006/12/blog-post_01.html"

யோசிக்க வைக்கும் வரிகள்

" தமிழர்கள் உங்களிடம் ஒற்றுமை கிடையாது.உங்களுக்கு ஒரு identity கிடையாது.ஒத்துமையா இல்லைனா எப்படி மத்திய அரசிடம் சண்டை போட்டு உங்க பங்கை வாங்குவிர்கள்"

இவ்வாக்கியகங்களை படிக்கும்பொழுது ,77ல் நம் தமிழகம் இருந்த நிலமையும்,இன்றும் பெரிதாக மாறி விடவில்லை என்பது நமக்கு புரிகிறது.கழகங்களின் "தமிழர்" "தமிழ்" கொள்கையில் ஒரளவு நன்மை இருக்குதுபானு நம்மை நினைக்க வைக்கும.

மேலும் autonomy பற்றி

"இந்தியாவில் உள்ள பெரிய பிரச்சனையே ' over centralisation' . -மத்திய அரசு எல்லா முடிவுகளையும் (முக்கிய முடிவுகள் உட்பட) எடுப்பது - .இதற்கு ஒரே வழி மாநிலங்களுக்கு உரிமைகள பகிர்ந்து கொடுப்பதுதான்"

இன்றும் 'autonomy' கோஷம் வலுபெறவில்லை. காஷ்மீர் மற்றும் சில மட்டும் கத்தி கொன்டு இருக்கின்றன,கத்துவது கேட்காது என்பதை உணர்ந்து.

இப்புத்தகத்தை படித்தவுடன் தோன்றும் வியப்பு "77ல் இப்படி எழுதினாரா !"

படிக்க ஆர்வமா ?
உடன் விலைக்கு வாங்கி, இரவல் வாங்கி எப்படியாவது படியுங்கள்.
கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்

Monday, December 4, 2006

வணக்கம்

வணக்கம் .

ரொம்ப நாளா ஒரு ப்லாக் ஆரம்பிக்குணும் ஆசை.....புத்தக விமர்சன ப்லொக் பண்ணலாம்...ஆனா நான் பண்ணது மட்டும் வேனா...மத்த ப்லொக்ல மற்றும் வேப்ல பண்ணதொட ஒரு பகுதி (எல்லாமெ இல்ல) இங்க கொடுக்கலாம்...இந்த ப்லொக்கின் நோக்கம் நூல் அறிமுகம்..அவ்ளதான்...யார் வேன்டுமண்டராலூம் நூல் அறிமுகம் பண்ணலாம்...லின்க் கொடுக்கலாம்..இத ஒரு புத்தக டெடாபெசா ஆக்கனும்...அதற்கு நிங்கள் எல்லோரும் உதவனும்...