Sunday, December 24, 2006

வாடிவாசல் -சி.சு.செல்லப்பா




ஜெல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில்நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதற்கு வேண்டும். தான் போராடுவது மனிதனுடன் அல்ல. ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்குக் காத்துக் கொண்டிருக்கும்.

வாடிவாசல் குறித்து ஜெயமோகன்

உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. 'ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும் ' என்ற அசரீரிக் குரல் தமிழ மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.


காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜெல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை

இந்த நாவலின் கதாநாயகனான பிச்சி,அவன் கூட்டாளியும் மச்சினனுமான மருதன், அவர்கள் ஜல்லிக்கட்டின் போது சந்திக்கும் கிழவன், காரி காளையை வைத்திருக்கும் ஜமீன்தார் என்ற அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக வடிவமைக்கபட்டிருக்கின்றன.

ஒரே நாளில் நடைபெறும் சம்பவமாக இந்த கதை சித்தரிக்கப்பட்டு இருப்பது கதையின் விறுவிறுப்பை கூட்ட உதவுகிறது.தன் தந்தையின் உயிர் பிரிய காரணமாக இருந்த காளையை அடக்க வரும் ஒரு வீரனின் கதையை கச்சிதமாக வார்த்தைகளில் கூறுவதில் வெற்றி பெற்றுள்ளார் கதாசிரியர்.

வட்டார வழக்கில், அடுத்து என்ன நடக்கும் என நம்மை எதிர்ப்பார்க்க வைத்து இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் .

மாடு அணைவது ஐந்தறிவு மிருகத்திற்கும், மனிதனுக்கும் நடக்கும் நேரடி யுத்தம் இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை விட அந்த நேரத்தில் ஏற்படும் மனபோராட்டங்கள் மிக முக்கியமானவை.இடையிடேயே அந்த காலத்தில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரிய மனிதர்களுக்குமுன்

எவ்வளவு பணிந்து நடக்க வேண்டும் என்பதையும் மிக நுணுக்கமாக எடுத்து சொல்கிறது. ஜல்லிக்கட்டைப் பற்றி நமக்கு ஏற்படும் பல சந்தேகங்களை எளிய தமிழில் விளக்குகிறது.

40 வருடங்களுக்கு முன் வந்த இந்த நாவல் இன்னும் அழியாபுகழோடு இருப்பதற்கு காரணம் அதன் எளிய தமிழ் நடை மற்றும் களம்.

 

No comments: