Sunday, December 24, 2006

அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள் '

தமிழில் சினிமாவைப் பற்றி எழுதப்பட்ட நாவல்கள் என்று குறிப்பிடும்படியான ஒரு சில மட்டுமே இருந்தாலும் கரைந்த நிழல்களை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் இதை விட இன்னமும் சிறப்பாக சினிமா உலகத்தைப் பற்றிச் சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது.

கரைந்த நிழல்கள் - பிம்பங்களாகத் திரையில் வரும் நிழல்களுக்குப் பின்னால் கரைந்து போகும் மனிதர்களைப் பற்றிய கதை. இந்த நாவல் வழக்கமான கதை பாணியில் அமையாமல் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு கால இடைவெளிக்கு ஏற்ப அத்தியாயஙகளாக அமைந்த நாவல். திரைப்படம் என்னும் மாய உலகுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நாவல்.

கரைந்த நிழல்கள் குறித்து சா.கந்தசாமி

"கரைந்த நிழல்கள் போன்ற நல்ல நாவல்கள் தமிழில் நல்ல சினிமாவை அளிக்க இருக்கின்றன. அதனைக் கையாள ஒரு டைரக்டர் முன் வரவேண்டும். வராத வரையில் நாவலுக்கோ, நாவலாசிரியருக்கோ குறைவு ஒன்ரும் கிடையாது என்பது நாவலுக்குப் பெருமை தரும் விஷயமாகவே உள்ளது"


சினிமா சம்பந்தப்பட்ட எவ்வளவோ விஷயங்கள் - அவுட்டோர் - இண்டோர் ஷூட்டிங் பிரச்னைகள், அதற்கான முன்னேற்பாடுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள், தீர்வு காணும் முயற்சிகள், நடிகையின் முட், படத் தயாரிப்பாளரின் வீழ்ச்சி, படத்தின் வெற்றி-தோல்வி, படவுலகக் கவர்ச்சியும் பளபளப்பும், ஸ்டுடியோ நிர்வாகம், புது யூனிட் கட்டுதல், விநியோகமும் விளம்பரமும், இன்னபிற சினிமா விஷயங்களும் நம் கண் முன்னே காட்சிகளாக விரிகிறது.

முதல் அத்தியாயத்திலேயே நிஜமான சினிமா உலகத்தைக் காட்டும்போது திரையில் இதுவரை பார்த்து வந்த பிம்பங்களின் கவர்ச்சி போய்விடுகிறது. பெரும்பாலும் தன்னுடைய நாவல்களில் நனவோட்டம் என்ற முறையை அவர் வெகுவாகத் தவிர்த்துவிடுவதால், பாத்திரங்களின் செயல், பேச்சு ஆகியவற்றின் மூலம் கதை வளர்கிறது.

சினிமாவில் புரொடக்ஷன் மானேஜர் என்பவர் அந்தக் காலத்தில் விதிக்கப்பட்ட பத்தினிப் பெண்ணின் இலக்கணத்துக்கு ( ?) எந்தக் காலத்திலும் பொருந்திவர வேண்டியவர். எல்லோருக்கும் பின் தூங்கி முன் எழ வேண்டும். புரொடக்ஷன் மானேஜர் (தயாரிப்பு நிர்வாகி) நடராஜன், அதிகாலை மூணு மணிக்கு 'ஆறு ஷாட் மொத்தமே நூற்றைம்பது அடி ' படமெடுக்கவேண்டிய ஒரு குரூப் சாங்குக்கு வேண்டிய பிரயத்னங்களைப் பரபரப்புடன் பண்ணுவதில் துவங்குகிறது முதல் அத்தியாயம். வெறும் விடிகாலை நேரம் மட்டுமல்ல; தயாரிப்பாளர் ரெட்டியாரின் வீடு அடுத்தவாரம் அட்டாச்மெண்டுக்கு வரப்போகிற நேரம், பின்னால் ரெட்டியார் காணாமல் போய்விடுகிறார். அவரிடம் கடைசி நிலை ஊழியம் பார்த்த சம்பத் டைரக்டராகவோ, தயாரிப்பாளராகவோ உயர்ந்து விடுகிறான். பத்து தயாரிப்பாளர் போனால், 100 பேர் இண்டஸ்டிரிக்கு வருவது சினிமாவின் நிரந்தரம். அதன் உதாரணம் மேற்சொன்ன சம்பவம் என்று சொல்லலாம்.

கரைந்த நிழல்களின் மிகச்சிறப்பான அம்சம் மிகக்குறைந்த வரிகள் கொண்ட வர்ணிப்புகளாலும், சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் வாய்ப்பேச்சாக வரும் ஓரிரு வரிகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும் மறுத்துச் சொல்லமுடியாத 'வகை மாதிரியான ' கதாபாத்திரங்கள்தான். 'மாமண்டூரில வெத்திலை கிடைக்குமில்லே ? ' என்று கேட்கும் ராம்லால். பொங்கலுக்கு பூஜைபோட கோயம்புத்தூரில இருந்து பார்ட்டி வராங்க ' என்று சொல்லும், இன்டிபெண்டட்டாக படம் இயக்க இருக்கும் உதவி இயக்குனர் ராஜகோபால். உடையிலும், பாவனையில் எப்போதும் நாசுக்கு காட்டும் சிட்டி (எடிட்டிங் அஸிஸ்டென்ட்) இரண்டு நூறுநாள் படங்கள் கொடுத்த டைரக்டர் ராம்சிங்கைச் சுற்றி நாலைந்து நாற்காலிகள் இருந்தும் யாரும் உட்காராதது. ஸ்டூடியோ போகும் வழியில் தன் உறவினரை ஷூட்டிங் பார்க்க அழைத்துவர அவசரம் காட்டும் சம்பத். தன் வீட்டிலேயே மற்றவர்களுடன் நேராகக் கூட பேச இயலாத ராம ஐய்யங்கார். தான் வசனமெழுதிய படம் பிரபலமானதும் புதிதாக அரை டஜன் பட்டு ஜிப்பாக்கள் தைத்துக் கொண்ட கதாசிரியர். படம் போடச் சொல்ல அழைப்பு மணி இருந்தும் ஆபரேட்டர் ரூமுக்கே ஓடிப்போய் சொல்லிவிட்டு வருகிற பண்டிட்ஜி என்று உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இன்னொன்று, வாழ்க்கையின் ஈவிரக்கமற்ற, விசித்திரமான ரகசியச்சிரிப்பு - மிகவும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருப்பது. ஒரு இளம் நடிகையின் அலட்சியத்தினால் அழிந்த புரொடக்ஷன் கம்பெனி, அந்த கம்பெனியின் ஸ்கிரிப்ட்ஸ் ரிப்போர்ட்ஸ் முதலியவை கரையான்களால் அரிக்கப்பட்டு அரைப்படி தூசாக மக்கிப்போன கதை. ராம ஐயங்காரின் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்கள் ஏதோ ஒரு மொழி வெறி இயக்கத்தினால் தவிடு பொடியாவது, சம்பத்தின் உயர்வு, நடராஜனின் தாழ்வு இன்னபிற.

அந்தக்காலப் படங்களில் வகுக்கப்பட்ட இலக்கணமாக, கால இடைவெளியைக் குறிக்க fade in, fade out என்கிற உத்தியைக் கடைபிடிப்பார்கள்(இப்போதெல்லாம் வர்ஜா வர்ஜியமில்லாமல் cut to cut தான்) கால நீட்சியை ரஸிகன் தானும் உணரத்தக்க வகையில் அமைந்த கட்டுக்கோப்பு அந்த உத்தி. அதே பாணியில், நான்கு sequenceகளை பத்து அத்யாயங்களாக அமைத்துக் கொண்டு நாவலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். சில அத்யாயங்கள் நாவலுக்கு பொருந்தி வராதது போலத் தோற்றம் காட்டினாலும், ஏதோ ஒரு வகையில் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருப்பது உன்னிப்பாக பார்க்கும் போது புலனாகும்.

உதாரணமாக ராம ஐயங்காரும் அவரது மகன் பாச்சாவும் பேசிக்கொள்வதும், சற்றே புத்திசாலித்தனம் துருத்திக் கொண்டு தெரியும் ஒற்றைவரி வாதப் பிரதிவாதங்களினால் அமைக்கப்பட்ட ஒன்பதாம் அத்யாயத்தின் முன்பகுதி, கடைசியில் வருகிற கிட்டத்தட்ட மூன்று பக்க அளவுள்ள ராமாஐயங்காரின் அறிக்கை போன்ற நீளமான பேச்சினால் ஈடுகட்டப்பட்டுவிடுகிறது. அது வெறும் லெளகீக வாதியின் விருதாவான அறிவுரை அல்ல! எந்த ஓர் முந்தைய தலைமுறை மனிதனும் தனக்குத்தானே வெற்றியை தேடிக்கொண்டவன் என்ற ஹோதாவில், அடுத்த தலைமுறை மனிதனுக்குத் தன்னை வெளிப்படுத்தி பின்னவன் குறையை குத்திக்காட்டும் மாறாத தீவிரமாகத்தான் தோன்றுகிறது. நாவலின் இறுதியில் நெருடுகிற விஷயங்கள் இரண்டு. ஜெயச்சந்திரிகா, ராஜகோபாலைத் திருமணம் செய்து கொள்வது, நடராஜனின் வீழ்ச்சி. இரண்டுமே கதாபாத்திரங்கள் சம்பந்தப்பட்டவை. முதல் இருவர் தொடர்பான முடிவுக்குக்கூட 'யாரும் அதிகம் லட்சியம் செய்ய வேண்டியிராத ஒருவனிடம் அசாதாரண கவனம் காட்டுவது ஜெயச்சந்திரிகாவின் இயல்பு ' என்று ஆசிரியர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கும் வர்ணனையிலிருந்து 'அது அப்படி நேர்ந்திருக்கலாம் ' என்று உத்தேசிக்க முடிகிறது. நடராஜன் கதாபாத்திரத்தின் முடிவை ஆசிரியர் வேறு மாதிரி வார்த்திருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.

கதைப்படங்கள் ஒரு டாக்குமெண்டரிப் படச்சூழலிலும், டாக்குமெண்டரிகள் ஒரு கதைப்படத் தொனியிலும் அமைக்கப்படுகிறபோது, ஆழ்ந்த கனம் கூடும் என்ற ட்ரூபோ சொன்னதாக ஞாபகம். அந்தப் பாணியில் நிறைய 'கதைகள் ' ஒரு உலகத்தை எந்தக் கதையுமில்லாமல் படம் பிடித்துக் காட்டியிருப்பது அசோகமித்திரனின் திறமை.

ஸ்டூடியோ சிஸ்டம் பிரபலமாக இருந்த காலகட்டத்தை மையமாகக் கொண்ட நாவல் இது. தற்போது பற்பல மாற்றங்கள் வந்து விட்டன. எந்த சினிமாக் கம்பெனிக்கும் இப்போதெல்லாம் ஸ்டூடியோக்களில் நிரந்தர அலுவலகம் கிடையாது. ஏனெனில் ஸ்டூடியோக்களே நிரந்தரமில்லை (படப்பிடிப்புக்கு) என்கிற அளவு தணித்துப் போய்விட்டது. ஆளாளுக்கு கேமராவை தோள்மீது தூக்கிவைத்துக் கொண்டு வயக்காட்டுப் பக்கம் போய்விடுகிறார்கள். ஆகாத மாமியாரை பார்க்கப்போகும் மருமகள் போல் எப்போதாவது ஒரு தடவை setwork, பேட்ச் வொர்க் என்று தான் ஸ்டூடியோ பக்கம் தலைக்காட்டுக்கிறார்கள். இப்படி மேற்போக்கான மாற்றங்கள் நேரிடினும், அடிப்படையில் கரைந்த நிழல்கள் இன்றும் படிக்கப் புதிதாக இருப்பது அதன் ஆச்சரியம்.

இந்த நாவலில் ஆசிரியர் சினிமா உலகத்தை முழுக்க விண்டு காட்டிவிட்டாரா ? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அது ஆசிரியரின் நோக்கமும் அல்ல.

தனக்கு நேர்கிற அனுபவங்களையும், அதனால் பெறப்படும் சிந்தனைகளையும் சார்ந்து எந்த ஒரு பிரச்னை குறித்தும் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்து சேர்வது சாத்தியம் என்றே மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால், எந்தவொரு தீர்மான அபிப்ராயங்களுக்கும் இடம் தராதது வாழ்க்கை. அப்படிப்பட்ட கருத்துக்களைக் குறித்து எள்ளை நகையாடி கெக்கலிகொட்டிச் சிரிப்பது வாழ்க்கை. எனில், அதன் மிகச்சிறிய பகுதியான சினிமாஉலகத்துக்கும் இது பொருந்தக்கூடும். கடலுக்கு உண்டான நியாயம் அதன் துளிக்கும் உண்டுதானே ? இதை அறியாதவரா என்ன அசோகமித்திரன் ?

சினிமா என்னும் மிகப் பிரம்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தும் நாவல் கரைந்த நிழல்கள். சினிமா உலகத்தில் தானாகவே உருவான சட்ட திட்டங்கள்; அந்தச் சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோ முதலாளிகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், புரொடக்ஷன் - புரோகிராம் மேனேஜர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துணை நடிகர்கள் என்று பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை பெரும்பாலும் சினிமாவைப்போல் வண்ணமயமாக அமைந்துவிடுவதில்லை. திரையில் பயிரிடும் கனவுகளுக்காக வாழ்வின் கனவுகளைச் சிதைத்து உரமாக்கும் வர்க்கம் குறித்த இப்படியொரு யதார்த்தம் குலையாத நாவல் இதற்கு முன்னும் பின்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை.

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் படைப்பியக்கத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் அசோகமித்திரன், ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவரது பல படைப்புகள் இந்திய-அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. இந்த நாவல் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளது. அசோகமித்திரன், 'அப்பாவின் சிநேகிதர்' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 1996-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
விலை: ரூ.60


No comments: