Friday, December 29, 2006

தலைமுறைகள்-நீல பத்மநாபன்






கற்பனையே கலக்காமல் எழுதப்பட்டது போன்ற புனைவுப் பாவனை கொண்டது . இம்மி கூட மிகை இல்லாதது . வட்டார வழக்கிலேயே கதையையும் சொல்ல முயல்வது .அதாவது மைய ஒட்ட அம்சங்கள் எதுவுமே இல்லாமல் முழுக்க முழுக்க பிராந்திய வட்டாரக் கலாச்சார அடையாளத்தை நம்பி இயங்கும் படைப்பு அது. ஆகவே அதை க. நா .சு ,வெ சாமிநாதன் ஆகியோர் ஒரு முக்கிய முன்னுதாரண படைப்பாக கருதி முன்வைத்தார்கள் .இப்போதும் தமிழ் எழுத்தின் முக்கியமான வலிமை என்பது இங்குள்ள பெரும்பாலான படைப்புகளின் பிராந்திய அடையாளத்தில்தான் உள்ளது .அதற்கு வழிகாட்டிய படைப்பு இது. [இவ்வகையில் அடுத்தபடியாக குறிப்பிடப்படவேண்டிய படைப்பு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு ] சமீபத்தில் குமுதம் எடுத்த ஒரு சர்வேயில் தமிழின் 10 நாவல்கள் பட்டியலில் எல்லாருடைய பட்டியலிலும் இடம் பெற்றிருந்த நாவல்களில் தலைமுறைகளும் ஒன்று .இது இப்போதும் இப்படைப்புக்கு உள்ள விமரிசக அங்கீகாரத்தை காட்டுகிறது.இன்று இப்படைப்பு அதன் இறுதிப் பகுதி கவித்துவமாக அமையாமல் நாடகத்தன்மையுடன் அமைந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக முக்கியமான படைப்பாகவெ கருதப்படுகிறது.

'தலைமுறை 'களின் கதை காலாகாலமாக இந்திய இலக்கியங்களின் பேசுபொருளாக உள்ள பெண்ணின் துயரம்தான் .நமது செவ்வியல் படைப்புகளிலும் சரி ,நவீன படைப்புகளிலும் சரி இவ்வாறு முக்கியமான அவலங்கள் பெண்கள் சார்ந்தவையாக இருப்பது சமூகவியல் ரீதியானகாழமான கவனத்துக்குரியது .ஏனெனில் பெண்கள் ஒடுக்கப்பட்டது உலகளாவிய நிகழ்வு ,பிற கலாச்சாரங்களில் மேலும் அதிகம் .அங்கெல்லாம் இப்படி பெண் காவியநாயகி யாக ஆக்கப்படவில்லை . வீரர்களே முக்கியமான காவியநாயகர்கள் அங்கு . இங்கு சீதையும் கண்ணகியும் மணிமேகலையும் காவியநாயகிகள்.அர்ச்சுனன்போன்ற ஒரு வீரனை ஐதீக மரபு உருவாகியபோதே அல்லியையும் அது உர்வாக்கியது .அடுத்த கட்ட வாய்மொழிக் கதைகளில் நல்லதங்காள் போன்ற அவல நாயகிகள் உள்ளனர் .பெண் ணை மையமாக்கிய அவலக்கதைகள் நம் அமரபின் கதைச்சொத்தின் பெரும்பகுதியை அடைத்துக் கொடன .பிற்பாடு நவீன புனைகதை வடிவங்கள் இஉருவான போது அதே பாணி தொடர்ந்தது .அக்கதைகளில் மரபில் உள்ள கதைகளின் தீவிரமான சாயல் இருந்தது இயல்பே.பிறகு திரைப்படங்களில் கூட அதே மரபுநீடித்தது .வான்மீகி ராமாயணமும் , மதர் இந்தியாவும் ஒரே நேர்கோட்டில் அமைந்தவையே .

இது குறித்து அடிப்படையான ஆய்வுக் குறிப்பொன்றை டி டி கோசாம்பி சொல்ல்லியுள்ளார். தாய்வழி சமூக அமைப்பாக இருந்து தந்தை வழி அமைப்புக்கு மாறியவையே இந்திய சமூகங்கள் ..நமது எண்ணற்ற தாய் தெய்வங்கள் அம்மரபின் தொடர்ச்சிகளே. நமது ஐதீக வாய் மொழிக்கதைகளில் அந்த வீழ்ச்சி குறியீட்டு வடிவில் முக்கிய இடம் பிடித்தது . பிறகு அத்தனை நேரடி வாழ்க்கை நினைவுப்பதிவுகளும் அந்த ஐதீக மரபில் இணைவு பெற்றன. ஆகவே காவியம் முதல் சிறிய கதை மரபு வரை வரை பெண்ணின் அவலம் முக்கிய மையமாயிற்று. இன்றும் நம் அகமன கட்டுமானத்தில் படிமங்களாக உள்ளது அந்த இறந்தகாலமே .ஆகவே நவீன இலக்கியங்கள் கூட அதே பாணியில் உள்ளன. பழிவாங்கும் உக்கிர தேவதை [பழையன்னூர் நீலி ] அருள் வழங்கும் அன்னை[ காஞ்சி காமாட்சி ] அடக்கியளும் அன்னை [சமயபுரம் மாரி ]என்று தமிழ் புனைகதைகளின் பெண் கதாபாத்திரங்களை நாம் தொல்படிம [aaன்] தர்க்கத்துக்குள் அடுக்கிப் பார்க்க முடியும்.

'தலைமுறை 'கள் அந்த மரபில் சகஜமாக இணைவதை அதன் தொடக்கப்புள்ளியிலேயே காணலாம். ஏழுவீட்டுச் செட்டிகளின் குடும்பத்தில் குலமரபின் வாய்மொழி ஐதீகமாக ஒரு கதை உள்ளது . அவர்களுடைய பூர்வீகம் காவிரிப்பூம்பட்டினம் .அவர்கள் அங்கிருக்கும்போது அங்குள்ள சோழ் மன்னனுக்கு விலைமதிப்பிட முடியாத சில பவளங்கள் கிடைக்கின்றன. அதில் துளைபோட்டு மாலையாக்க அங்குள்ள எல்லா பொற்கொல்லர்களும் முயன்றபோதும் முடியவில்லை .பவளங்கள் உடைந்து விடக்கூடும். என்ன செய்வதென்று மன்னன் தவித்து கடசியில் தன் அவையில் இருந்த ஒரு செட்டியாரை கூப்பிட்டு நீர் என்ன செய்வீரென்று தெரியாது நாளைக்கு விடிவதற்குள் இந்த பவளங்களுக்கு துளைபோட்டு கொண்டுவரவேண்டும் இல்லையேல் கழுத்தில் தலை இருக்காதெள என்று உத்தரவு போடுகிறான் . வீட்டுக்கு வந்த செட்டியார் கவலையுடன் இருப்பது கண்ட அவரது இரு மகள்கள் தங்கம்மையும் தாயம்மையும்தேற்றுகிறார்கள் .துளையை தாங்கள் போட்டு விடுவதாகச் சொல்கிறார்கள் .ஊசி நுனியில் பனைவெல்லச் சாறை தொட்டு ஒவ்வொரு பவளத்திலாக ஒரு பொட்டு வைத்து அவற்றை வரிசையாக எறும்பு புற்றுக்கு முன்னால் போடு விடுகிறார்கள் .எறும்புகள் வெல்ல வாசனையை குறிவைத்து அரித்து எல்லா பவளங்களிலும் சிறு துளைபோட்டு விடுகின்றன .

இந்த விஷயம் தெரியவந்தபோது மன்னன் இத்தனை அறிவுள்ள பெண்கள் இருக்கவேண்டிய இடம் அந்தப்புரம்தான் என்று சொல்லி பெண் கேட்கிறான் . சாதியை விட்டு பெண் கொடுக்க செட்டியார் குலத்துக்கு விருப்பமில்லை . மறுக்கவும் முடியாது .ஆகவே செட்டியார் தன் வீட்டில் இருந்த நிலவறைக்குள் அப்பெண்களை போகச்சொல்லி மூடி மேலே மண்ணை நிரப்பி விட்டார். பிறகு எல்லாரும் அங்கிருந்து கிளம்பி நடந்து குமரிமாவட்டம் வந்து இரணீயலில் குடியேறுகிறார்கள் . இந்தக் கதையை இந்நாவலின் முக்கிய கதாபாத்திரமான உண்ணாமுலை ஆச்சி தன் பெரனும் கதாநாயகனுமாகிய திரவியத்துக்கு குழந்தையாக இருக்கும் போது வீட்டை பெருக்கி கோலம் போட்டபடி சொல்கிறாள் .குறியீட்டு ரீதியாகப்பார்த்தால் பெண் புதைக்கப்பட்ட மேடு மீதுதான்நேழுவீட்டு செட்டியார் குலமே கட்டப்பட்டுள்ளது .அந்தக் குற்றவுணர்வு தலைமுறைதலைமூறையாக கைமாறவும் படுகிறது .ஆனால் அடிப்படையில் அது ஆண்வழி அதிகாரக்குலம் .அதன் அடையாளம் உலகமே தனக்கானது என்று எண்ணும் கூனங்காணிப்பாட்டா .

ஆகவே நாகு அக்கா அவள் கணவனால் குழந்தைபெற முடியாதவள் என்று விலக்கப்பட்ட போது ,சர்வ சகஜமான அந்த செயலுக்கு எதிராக திரவி செயல்பட ஆரம்பித்தது ஒரு முக்கியமான புரட்சி .ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டுபோய் அக்காவிடம் எந்தப் பிரச்சினையுமில்லை என்று அவன் நிரூபத்தது ஒருவகையில் அடுத்த காலகட்டத்தின் ---அறிவியல் காலட்டத்தின்-- வருகையின் குறியீடுமாகும் .அவள் கணவன் அவளை ஏற்கமறுத்தபோது அவளுக்கு மறுமணம் செய்விக்க அவன்முயன்றது கண்டிப்பாக ஒரு பெரும் புரட்சி நடவடிக்கையே . ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை .மொத்த நாவலும் தீவிரமான அவலத்தில் முடிகிறது . இந்த அவல முடிவு பெரிதும் விவாதிக்கப்பட்டது . அந்த வலம் சினிமாத்தனமாக இருப்பதாக முதிர்ச்சியில்லா விமரிசகர்கள் சொல்ல அழகியல் மொழி அறிந்தவர்கள் அம்முடிவு அதுவரை நாவலுக்கு இருந்துவந்த அப்பட்டமான நிதரிசனப்போக்குக்கு ஒத்து வராமையினால் சற்று நம்பகத்தன்மையை இழந்து விட்டிருக்கிறது என்றார்கள் . ஆனால் ந்தன் விடையை நாம் இலக்கிய வடிவில் மட்ட்மே தேடி விட முடியாது . தலைமுறைகள் ஒரு நீண்டன் வாய்மொழிமரபின் , ஐதீக மரபின் இன்றியமையாத தொடர்ச்சியாகும் .அம்மரபில்ஈருந்துவரும் அவல முடிவை அதுவும் தவிர்க்க முடியாது . அதாவது அந்த பவளம் கோர்க்கும் கதை நாவலின் தொடக்கத்தில் வந்ததுமே குறியீட்டு ரீதியாக நாவலை அது தீர்மானித்து விட்டது .அதை நீல பத்மனாபன் மீறிவிட முடியாது . சொந்த வாழ்வில் அவர் அதை மீறி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கதை எப்போதுமே கதைமரபின் தர்க்கத்துக்கு உட்பட்டது .

'தலைமுறை 'களின் நடை பெரிதும் பாராட்டப்பட்டது.ஏற்கனவே சொல்லப்பட்டது போல அது மிக நிதரிசனமான நடை .அதில் சுவாரஸியப்படுத்தும் அம்சங்கள் ஏதும் இல்லை .அழகுகளே இல்லை .உண்மையிலேயே அத்தகைய ஒரு வாழ்க்கைச் சூழலுக்கு எவ்வளவு உத்வேகம் இருக்குமோ அவ்வளவு உத்வேகமே அதிலும் உள்ளது. பொதுவாக இக்கியப்படைப்புகளில் கதைமையம் அல்லது கதைசொல்லி அறிவாளியாகவோ ,மிகுந்த நுண்ணுணர்வுள்ளவனாகவோ காட்டப்படுவதே வழக்கம் . காரணாம் அவன் மூலம் ஆசிரியர் வெளிப்படுகிறார் என்பதே .ஆனால் திரவி மிகச்சாதாரணமானவனாகவே காட்டப்படுகிறான்.லெளகீகமான , நடுத்தர வற்கத்துகே உரிய எல்லா கோழைத்தனங்களும் தயக்கங்களுமுள்ள ஒருவன் . அவன் புரட்சியாளனோ கலகக் காரனோ அல்ல .அவன் சற்று படித்து அதன்

மூலம் நவீன காலகட்டத்துக்குள் வந்தது மட்டுமே அவனுக்கும் பிறருக்குமிடையேயான வித்தியாசம் .இதன் மூலம் நாவலின் ஒவ்வொரு வரியிலும் நம்பகத்தன்மைமிக்க எளிமை உருவாகிவந்தது . ' 'சர்வ சாதாரணத்தின் கலை ' ' என்று தமிழில் எதையாவது சொல்லவேண்டுமென்றால் நீலபத்மநாபனின் இந்நாவலையே சொல்ல முடியும்.சாதாரணமான நடையின் சாதாரணத்தன்மையை மேலும் அதிகரிக்கும் முகமாக நீலபத்மநாபன் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் கதை சொல்லும் குரலுக்கும் வட்டார வழக்கை அளித்தார் .இது அக்காலகட்டத்தில் மிகவும் விவாதிக்கப்பட்டது .தூயதமிழ் வாதிகளின் எதிர்ப்பு நாவலுக்கு ஒரு எதிர்மறை விளம்பரமாகவும் அமைந்தது .

'சர்வசாதாரணம் ' என்பதற்கும் 'சர்வசாதாரணத்தின் கலை ' என்பதற்கும் ஏராளமான வேறுபாடு உண்டு . கலையின் சர்வசாதாரண இயல்பு ஒரு தோற்றமே . அது வாசக நம்பிக்கைக்காக உருவாக்கப்படும் ஒரு வெளிப்பாட்டு உத்தி மட்டுமே .கலை ஒரு போதும் சர்வசாதாரணமல்ல .சாதாரணமான நிகழ்வுகளின் பிரவாகமான வாழ்க்கை ஓட்டத்திலிருந்து சிலவற்றை பிரித்தெடுத்து முன்வைத்து ,அழுத்தம்தந்து ,உபரி அர்த்தம் அளித்து ,விளக்கி ,செறிவுபடுத்தி அதில் வாழ்க்கையின் ஒட்டுமொத்தம் சார்ந்த ஒரு பார்வையை அல்லது ஒரு அகத்தெளிவை குறிப்புணர்த்திக் காட்டுவதே இலக்கியக்கலையின் செயல்பாடாகும் .எல்லா கலையும் இவ்வியல்பினையே கொண்டிருக்கின்றன என்பார்கள் மொழியியல் பேராசிரியர்கள் .ஹால்லிடே முன்னிறுத்தல் [forefronting] என்று இதை விரிவாக விளக்குகிறார் . உதாரணமாக நித்ய சைதன்ய யதி ஒன்றை குறிப்பிடுவார் .வான்கா ஒரு ஏழை விவசாயியின் பழைய செருப்பை வரைந்தார் .அது ஒரு வெறும் பொருள்தான்.ஆனால் அதை முன்னிலைப்படுத்தி விடுகிறார் .அவரது கலை என்பது அங்குதான் செயல்படுகிறது . அதன் பிறகு அந்த செருப்புகள் வெறும் பொருட்களல்ல ,குறியீடுகள் ஆகிவிடுகின்றன அவை .அவற்றுக்கு உள்ளர்த்தங்கள் உருவாகி விடுகின்றன.உண்மையில் ஒரு பழைய செருப்பு உருவாக்காத பலவகையான மன அதிர்வுகளை அவை நம்முள் உருவாக்குகின்றன .

அதாவது உத்தி என்று பார்த்தால் மிகைப்படுத்தல் சாதாரணமாக்கல் ஆகிய இரண்டுக்குமே ஒரே மதிப்புதான் .தன்னளவில் எதற்கும் மதிப்போ இழிவோ உருவாவது இல்லை .ஒப்பீடூ சார்ந்து தற்காலிகமான மதிப்பீடுகள் உருவாகுமென்பது உண்மையே .அதாவது ஒரு சூழலில் எல்லா படைப்புகளுமே மிகையான கற்பனாவாதத் தன்மையுடன் இருக்கும்போது வரும் அப்பட்டமான யதார்த்தவாதப்படைப்பு அச்சூழலில் அதிர்ச்சியையும் அதன்மூலம் கவன ஈர்ப்பையும் அதன் அடுத்த கட்டமாக விமரிசன முக்கியத்துவத்தையும் பெறக்கூடும்.அதேபோலவே யதார்த்தவாத படைப்புகள் மலிந்த காலத்தில் வெளிவரும் அற்புத யதார்த்த படைப்புக்கும் அந்த முக்கியத்துவம் ஏற்படலாம் . ஆனால் படைப்பின் மொத்தமான முக்கியத்துவமென்ன

அதற்கு அவ்வுத்தி என்ன வகையில் பங்காற்றியுள்ளது என்பதே முக்கியமானது . தலைமுறைகளின் மேல்தளம் சாதாரணமானது என்றாலும் அதன் அடித்தளத்தில் நாம்வாழும் சமூகம் சார்ந்த சிக்கல்கள் சருமத்துக்கு அடியில் ரத்தக்குழாயின் பின்னல்கள் போல அடர்ந்துள்ளன. ஒரே ஒரு உதாரணம் சொல்லலாம்.திரவி தான் சார்ந்த ஏழுவீட்டு செட்டியார் சாதியை அதன் பழைமைப்போக்குகளில் இருந்து மீட்டு அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல முயல்பவன். அதேசமயம் அவன் தன்னை அறியாமலேயே பழைய காலத்துக்கான ஏக்கத்தையும் வெளிப்படுத்தியபடியே இருக்கிறான்.இந்தமுரண்பாடு எளிதில் விளக்கிவிடக் கூடியது அல்ல

திரவி இலட்சியவாதி அல்ல .தன் அக்காவை அவளது வாழ்க்கையின் துக்கத்திலிருந்து மீட்பதே அவனது இலக்கு .அவன் புதியகாலத்துக்கு போக முனைவது ஒரு சமூகஜீவியாக .அவனது மனம் இளமைப்பருவத்தை எண்ணி கடந்தகால வாழ்க்கைக்காக ஏங்குவது ஒரு தனிமனிதனாக . இத்தகைய ஆழமான அகமுரண்பாடுகள் நிரம்பிய ஒரு பரப்பாக உள்ளது தலைமுறைகளின் கதையோட்டம் .

'தலைமுறை 'களை மிக இளம்வயதில் படிக்கும்போது விசித்திரமான ஒரு பொறுமையின்மை ஏற்படும். திரவி என்ன செய்தும் ஒன்றுமே நிகழவில்லை .கூடிக்கூடிப் பேசுகிறார்கள்.மனக்கசப்புகளையும் நெகிழ்வுகளையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் .உறவுச்சிக்கல்கள் அடர்ந்து விரிந்தபடியே செல்கின்றன . மிக எளிய விஷயம் ,ஆனால் அது நடக்கவே இல்லை . ஒரு கட்டத்தில் தமிழக வாழ்க்கைச் சூழலை அறிந்தவர்களுக்கு நாகுவின் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற உண்மை புலப்பட்டுவிடும்.அதன் பின்பும் பேச்சுகள் .அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.குடும்பம் இரணியலைவிட்டு கிளம்புகிறது .நம் எளிய வாசக மனம் வேறு வகை முடிவுகளுக்காக துடிப்புகொள்வதும் ஆசிரியர் மீது மனக்கசப்பு கொள்வதும் இயல்பே . ஆனால் இம்முடிவே தமிழ் வாழ்க்கைச்சூழலில் பெருமளவு நடக்கக் கூடியது .மாறாக நடப்பது விதிவிலக்கே . 'தலைமுறைகள் ' அதன் யதார்த்த இயல்புப்படி விதியையே சார்ந்து இயங்க முடியும் .விதிவிலக்குகளை மையமாக்கும் படைப்புகள் கற்பனாவாதம் நோக்கி நகர்கின்றன.

'தலைமுறைகள் 'அவ்வகையில் ஒரு முன்னோடியாக அமைந்தது. நாம் முதலில் எழுதவேண்டியது கனவுகளையல்ல நிதரிசனத்தை என்று அது கற்பித்தது . எந்தக் கனவும் நிதரிசனம் சார்ந்து செயல்படும்போதே முக்கியத்துவம் பெறுகிறது என்று பொட்டில் அடித்தது போல சொல்லியது. இப்போது யோசிக்கும்போது வியப்பு ஏற்படுகிறது . அக்காலகட்டம் அரசியல் நோக்கோடு உற்பத்தி செய்யப்பட்ட வெற்றுக்கனவுகளும் ஆடம்பரச் சொற்களும் காற்றில் நிரம்பியருந்த காலகட்டம் . கற்பனாவதப்படைப்புகளை வாசகர்கள் ருசித்து விழுங்கிக் கொண்டிருந்த காலகட்டம் .அச்சூழலில் இருந்தபடி இத்தனை கறாரான யதார்த்த உலகை ஆக்குவதற்கு தன் கலையில் முழுக்க ஆழ்ந்து போகும் மனஒருமை கூடவேண்டும் . தன் கலைமீது ஆழமான நம்பிக்கை உருவாகவேண்டும் . மேலான கலைப்படைப்பு அதை சகஜமாக உருவாக்கிவிடும்போலும்.அந்த கலையம்சத்தால்தான் அது உருவான காலகட்டத்தின் எல்லா சூழல்சார்ந்த அர்த்தங்களும் அடிக்குறிப்புகளும் இல்லாமல்போன அடுத்த காலகட்டத்திலும் அதற்கடுத்த காலகட்டத்திலும் அந்நாவல் சட்டையுரித்து முன்னகரும் அரவம் போல புற அடையாளங்களையெல்லாம் கழட்டிப்போட்டு சென்றபடியெ இருக்கிறது போலும்.

No comments: